போராட்டக்களத்தில் புகுந்த மர்ம நபர்...4 பேரை கொல்ல திட்டம்...விவசாயிகள் பரபரப்பு குற்றச்சாட்டு!
டெல்லி: டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் சிங்கு எல்லையில் சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றித்திரிந்த முகமூடி அணிந்த மர்ம நபரை விவசாயிகள் பிடித்தனர்.
விவசாய சங்க தலைவர்கள் 4 பேரைக் கொலை செய்யவே முகமூடி அணிந்த அந்த நபர் வந்துள்ளார் என்று அவர்கள் பரபரப்பு குற்றம்சாட்டினார்கள்.
டிராக்டர் பேரணியை சீர்குலைத்து எப்படியாவது போராட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என சிலர் முயற்சி செய்து வருவதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.
தொடர் போராட்டம்
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசு அவர்களுடன் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் அது தோல்வியில்தான் முடிந்து வருகிறது.
பேச்சுவார்த்தை தோல்வி
இந்த நிலையில் நேற்று விவசாய சங்க பிரதிநிதிகளுடன் வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தலைமையில் 11-ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் விவசாய சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளும், மத்திய அமைச்சர்களும் கலந்துகொண்டனர். மத்திய அரசும், விவசாயிகளும் தங்களது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தனர். மத்திய அரசு முன்வைத்த 18 மாதங்கள் வேளாண் சட்டங்களை நிறுத்தி வைக்கிறோம் எனும் திட்டத்தையும் விவசாயிகள் புறக்கணித்தனர். வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தனர். இதனால் இந்த பேச்சுவார்த்தை எந்த முடிவும் எட்டப்படாமல் முடிந்தது.
முகமூடி நபர் பிடிபட்டார்
இந்நிலையில் நேற்று இரவு டெல்லி-ஹரியானா எல்லைப்பகுதியான விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் சிங்கு எல்லையில் முகமூடி அணிந்த ஒரு நபர் சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றித் திரிந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த விவசாயிகள் உடனடியாக அந்த நபரை பிடித்து விசாரித்தனர். அப்போது திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.
#WATCH | Delhi: Farmers at Singhu border present a person who alleges a plot to shoot four farmer leaders and cause disruption; says there were plans to cause disruption during farmers' tractor march on Jan 26. pic.twitter.com/FJzikKw2Va
— ANI (@ANI) January 22, 2021
கடுமையான சதி நடக்கிறது
விவசாய சங்கத் தலைவர்கள் பிடிபட்ட அந்த நபருடன் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது: போராட்டக் களத்தில் சந்தேகப்படும்படியாக முகமூடி அணிந்த ஒரு நபரை பிடித்து ஹரியானா போலீஸிடம் ஒப்படைத்துள்ளோம். நாங்கள் நடத்தும் போராட்டத்தைச் சீர்குலைக்க கடுமையான சதி நடந்து வருகிறது.
4 பேரை கொல்ல திட்டம்
போராட்டக்களத்தில் விவசாய சங்க தலைவர்கள் 4 பேரைக் கொலை செய்யவே முகமூடி அணிந்த அந்த நபர் வந்துள்ளார். அதுமட்டுமல்லாமல் வரும் 26-ம் தேதி டெல்லியில் விவசாயிகள் சார்பில் நடக்கும் டிராக்டர் பேரணியைச் சீர்குலைக்கவும் சதி நடக்கிறது. எப்படியாவது போராட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என சிலர் முயற்சி செய்து வருகின்றனர் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.