நள்ளிரவில் காரில் விழுந்த முட்டை அடுத்து துப்பாக்கிச்சூடு - படுகாயமடைந்த பெண் செய்தியாளர்
டெல்லி: நொய்டாவில் இருந்து நள்ளிரவு நேரத்தில் டெல்லிக்கு காரில் சென்று கொண்டிருந்த பெண் செய்தியாளர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. முகமூடி அணிந்த மர்ம நபர்கள் முதலில் கார் கண்ணாடி மீது முட்டையை வீசியுள்ளனர். அதன் பின்னர் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். குடும்ப தகராறு காரணமாக துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த செய்தியாளரின் பெயர் மிதாலி சந்தோலா என்பதாகும். இவர் நொய்டாவில் இயங்கும் செய்தி சேனலில் ரிப்போர்ட்டராக வேலை செய்கிறார். நள்ளிரவு நேரத்தில் ஷிப்ட் முடிந்து காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவரது காரை வேகமாக ஒரு கார் முந்திக்கொண்டு உரசியபடி சென்றது இதில் பதற்றமானார்.
அப்போது காரில் இருந்த முகமூடி அணிந்த மர்ம நபர்கள் மிதாலியின் கார் மீது முட்டையை அடித்தனர். இதில் பயந்து போய் காரை நிறுத்தாமல் ஓட்டிச்சென்றார். முன்னால் சென்ற காரில் இருந்த மர்ம நபர்கள் திடீரென துப்பாக்கியால் சுட்டனர். இதில் மிதாலியின் கைகளில் குண்டு பாய்ந்தது, அதில் அதிர்ச்சியடைந்து வண்டியை நிறுத்தினால் அடுத்த குண்டு நெத்தியில் பாய்ந்தது.
ரத்தம் சொட்டச் சொட்ட மயங்கி சரிந்தார். நள்ளிரவு நேரத்திலும் பரபரப்பான அந்த சாலையில் சென்றவர்கள் மிதாலியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் மிதாலி சந்தோலாவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், விசாரணை நடத்தினர். வழிப்பறி கொள்ளையர்கள் இந்த சம்பவத்தை மேற்கொண்டிருக்கலாம் என்று கூறப்பட்ட நிலையில் குடும்ப தகராறு காரணமாக துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.