இதுதான் முதல் முறை.. மசூத் அசார், தாவூத் இப்ராஹிமுக்கு ஆப்பு.. இந்தியா செம அறிவிப்பு
டெல்லி: மசூத் அசார், ஹபீஸ் சையது, தாவூத் இப்ராஹிமை தீவிரவாதிகளாக அறிவித்துள்ளது இந்தியா. தனி நபர்களை தீவிரவாதிகளாக அறிவிக்க வகைசெய்யும் புதிதாக நிறைவேற்றப்பட்ட சட்டத்தின்படி எடுக்கப்பட்ட முதல் நடவடிக்கை இதுதான். இதனால் அவர்கள் பெரும் சிக்கலுக்கு உள்ளாகியுள்ளனர்.
சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) திருத்தம் (யுஏபிஏ) மசோதா, 2019 கடந்த ஜூலை மாதத்தில் நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. தனி நபர்களையும் தீவிரவாதிகளாக வரையறை செய்யும் வகையில் இந்த சட்டத் திருத்தத்தில் அம்சங்கள் இடம் பெற்றன.
எனவே, எதிர்க்கட்சிகள், பல இதற்கு எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால், இந்த சட்டம் பயங்கரவாதத்தை எதிர்கொள்ள மட்டுமே பயன்படுத்தப்படும் என்று நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார்.
தனிநபர்கள் செயல்
பயங்கரவாத செயல்கள் அமைப்புகளால் அல்ல.., தனிநபர்களால் மேற்கொள்ளப்படுகின்றன என்று அமித் ஷா கூறியிருந்தார். பயங்கரவாத அமைப்புகளாக ஒரு அமைப்பை அறிவிப்பதன் மூலம் பயங்கரவாதம் நிறுத்தப்படாது, ஏனென்றால் அந்த அமைப்பை நடத்தும் பயங்கரவாதிகள் தடையின்றிதான் உள்ளனர். அமைப்பு மீது நடவடிக்கை எடுக்கப்பட்டால், அதனுடன் தொடர்புடைய நபர் மற்றொரு பெயரில் அமைப்பைத் தொடங்கி பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொள்கிறார் என்று விளக்கம் அளித்தார் அமித் ஷா.
முதல் நடவடிக்கை
இந்த சட்டத் திருத்தத்திற்கு, கடந்த மாதம், ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார். இந்த சட்டத்தின்கீழ் ஒருவரை பயங்கரவாதியாக அறிவித்தால், அவரது சொத்துக்களை பறிமுதல் செய்யலாம். இப்போது அத்தகைய முதல், நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பயங்கரமான தீவிரவாதிகள்
இந்தியாவின் 'மோஸ்ட் வாண்டட்' தீவிரவாதிகளான, லஷ்கர்-இ-தொய்பாவின் நிறுவனர் ஹபீஸ் சயீத் மற்றும் ஜெய்ஷ்-இ-முகமதுவின் தலைவரான மசூத் அசார், நிழலுலக தாதா, தாவூத் இப்ராஹிம் மற்றும் ஹபீஸ் சையீத் கூட்டாளி, ஜாக்கி-உர்-ரஹ்மான் லக்வி ஆகியோரை பயங்கரவாதிகளாக மத்திய உள்துறை அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது. இந்த பயங்கரவாதிகளின் சொத்துக்களை முடக்க தேசிய புலனாய்வு அமைப்பின் (என்ஐஏ) இயக்குநர் ஜெனரலுக்கு உரிமை உண்டு.
யார் இந்த மசூத் அசார்
இந்தியாவில் பல பயங்கரவாத தாக்குதல்களை நடத்திய மசூத் அசார் சில மாதங்களுக்கு முன்பு ஐ.நாவால் உலகளாவிய பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டார். இந்தியாவில் பல தாக்குதல்களுக்கு மூளையாக செயல்பட்டது இவர்தான். புல்வாமா தாக்குதலுக்கும் இவரே காரணம். இதற்கு முன்னர், 2016 ல் பதான்கோட் விமானப்படை விமான நிலையம் மீது தாக்குதல், 2001 ல் நாடாளுமன்றம் மீதான தாக்குதல், அதே ஆண்டில் ஜம்மு-காஷ்மீர் சட்டசபை தாக்குதல் மற்றும் காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கு எதிராக பல தாக்குதல்களை நடத்தியதில் இவர்தான் மூளை.
பிணைய கைதிகள்
1999ம் ஆண்டு, டிசம்பர் 31 அன்று, காத்மாண்டுவில் இருந்து ஏர் இந்தியா விமானத்தை பயங்கரவாதிகள் கடத்திச் சென்றனர். பிணையக்கைதிகள் விடுவிக்கப்பட்டதற்கு ஈடாக அசார் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். அப்போதிருந்து, அவர் பாகிஸ்தானில் வசிக்கிறார். இந்தியாவுக்கு எதிராக தொடர்ந்து பயங்கரவாத சம்பவங்களை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.