ரயில்வே வரலாற்றில் முதன்முறையாக மசாஜ் சேவை... ரூ. 100 முதல் கட்டணம்
டெல்லி: இந்திய ரயில்வே வரலாற்றில் முதன்முறையாக பயணிகள் வசதிக்காக, ரயில்களில் மசாஜ் சேவையை அறிமுகப்படுத்த ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
நாட்டின் மிகப்பெரிய போக்குவரத்து நிறுவனமாக இருக்கும் ரயில்வே, தினம்தோறும் சுமார் 4 கோடி மக்களுக்கு சேவை அளிக்கிறது. ஆஸ்திரேலிய நாட்டு மக்கள் தொகைக்கு இது இணையானது ஆகும்.
பயணிகளின் வசதிக்காக பல புது உத்திகளை ரயில்வே செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், ஓடும் ரயில்களில் மசாஜ் சேவையை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம், ரயில்வேத்துறையின் வருமானத்தை உயர்த்துவதோடு மட்டுமல்லாமல், இதனால் ரெயிலில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என கூறப்பட்டுள்ளது.
ஜூலை 1 முதல் விமான கட்டணத்தை உயர்த்த முடிவு.. சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் தகவல்
மேற்கு ரயில்வே மண்டலத்தின் ரத்லாம் பிரிவு இதற்கான பரிந்துரையை முன் வைத்துள்ளது. இந்தூரில் இருந்து புறப்படும் 39 ரயில்களில் மசாஜ் சேவையை தொடங்கலாம் என்று இந்த பரிந்துரையில் கூறப்பட்டுள்ளது.
ஒப்பந்த முறையில் முதலில் இதனை செயல்படுத்தலாம் என்றும், மசாஜ் சேவை மூலம் ஆண்டுக்கு 20 லட்சம் ரூபாய் வரை வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் ரயில்வே உயர் அதிகாரி ராஜேஷ் பஜ்பாய் தெரிவித்துள்ளார். 15 முதல் 20 நாட்களுக்குள் இந்த சேவை தொடங்கப்பட்டு விடும். இந்த மசாஜ் சேவைக்கு நபர் ஒன்றுக்கு தலா ரூ.100 வசூலிக்கப்படும். இந்த சேவை காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படும்.
ஒவ்வொரு கோச்சிலும் 4 முதல் 5 மசாஜ் செய்யும் பணியாளர்கள் இருப்பார்கள். இவர்களுக்கு ரெயில்வேத்துறையின் ஐடி கார்டு வழங்கப்பட்டிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.