பிப்.1ல் தூக்கு என்றால்.. நிர்பயா குற்றவாளியின் மனு உடனே விசாரணை... தலைமை நீதிபதி அறிவிப்பு
டெல்லி: ஒருவேளை பிப்ரவரி 1ம் தேதி தூக்கிலிடப்படுவதாக இருந்தால், நிர்பயா கொலை குற்றவாளியின் மனு முன்னுரிமை அடிப்படையில் விசாரிக்கப்படும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே தெரிவித்துள்ளார்.
2012 டிசம்பரில் நிர்பயா என்ற மருத்துவ மாணவி ஓடும் பேருந்தில் 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு நடுரோட்டில் தூக்கி வீசப்பட்டார். இதில் படுகாயம் அடைந்த அந்த மாணவி சில நாளில் சிங்கப்பூரில் சிகிச்சை பலன் இன்றி இறந்து போனார்.
இந்த வழக்கில் ராம்சிங், முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்சய் குமார் சிங் மற்றும் ஒரு சிறுவன் உள்பட 6 பேரை டெல்லி போலீஸார் கைது செய்தனர்.
இந்திய அரசு எடுத்த அதிரடி முடிவுகள்.. ஒன்றுவிடாமல் பட்டியலிட்ட ஐரோப்பிய யூனியன் தீர்மானம்
4 பேருக்கு தண்டனை
இவர்களில் ராம்சிங், டெல்லி திகார் சிறையில் 2013 ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். 2013 ம் ஆண்டு செப்டம்பரில் இந்த வழக்கில் தீர்ப்பு அளித்த டெல்லி நீதிமன்றம் 18 வயது நிரம்பாத சிறுவன் என்பதால் இளம் குற்றவாளிக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது. அதேநேரம் முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்சய் குமார் சிங் ஆகிய 4 பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.
டத் வாரண்ட்
இதற்கிடையில் குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் சிங் கருணை மனுவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்துக்கு அனுப்பிவிட்டு தண்டனையை நிறுத்திவைக்க கோரினார். ஆனால் இந்நிலையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கருணை மனுவை நிராகரித்தார். இதையடுத்து அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது. எனினும் 4 பேருக்கும் பிப்ரவரி 1 ம் தேதி காலை 6 மணிக்குள் தூக்கு தண்டனை நிறைவேற்ற வேண்டும் என டெல்லி செசன்ஸ் நீதிமன்றம் டெத் வாரண்ட் பிறப்பித்துள்ளது.
வழக்கறிஞர் முறையீடு
இதனிடையே அவசரமாக கருணை மனுவை நிராகரித்ததை எதிர்த்து நிர்பயா கொலை குற்றவாளி முகேஷ் சிங்கின் மனுவை முன்னுரிமை அடிப்படையில் விசாரணை நடத்த வேண்டும் என அவரது வழக்கறிஞர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டேவிடம் முறையிட்டார்.
நீதிமன்ற பதிவாளர்
ஒருவேளை பிப்ரவரி 1ம் தேதி யாராவது தூக்கிலிடப்படுவதாக இருந்தால் முன்னுரிமை அடிப்படையில் விசாரிக்கப்படும் என தலைமை நீதிபதி எஸ்.ஏ பாப்டே தெரிவித்துள்ளார். நீதிமன்ற பதிவாளரை அணுகுமாறு முகேஷின் வழக்கறிஞரிடம் தெரிவித்தார். எனவே முகேஷ் சிங்கின் மனு விரைவில் விசாரிக்கப்படும் என தெரிகிறது. இதனால் பிப்ரவரி 1ம் தேதி 4 பேரும் தூக்கிலிடப்படுவார்களா என்ற பரபரப்பு எழுந்துள்ளது.