மவுனி அமாவாசை - கங்கையில் புனித நீராடிய மக்கள் - திரிவேணி சங்கமத்தில் பிரியங்கா புனித நீராடல்
மவுனி அமாவாசையை முன்னிட்டு கங்கை நதியில் ஏராளமான மக்கள் புனித நீராடினர். காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பிரக்யாராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார்.
டெல்லி: தை அமாவாசை நாள் வட இந்தியாவில் மவுனி அமாவாசையாக கடைபிடிக்கப்படுகிறது. நம்முடைய முன்னோர்களுக்கு புனித நீர் நிலைகளில் நீராடி திதி தர்ப்பணம் கொடுப்பது போல வட இந்தியாவில் ஏராளமானோர் கங்கை நதியில் நீராடி திதி தர்ப்பணம் அளித்தனர். காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பிரக்யாராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார்.
ஆடி மற்றும் தை மாதங்களில் வரும் அமாவாசை நாட்களில் கடல், ஆறு உள்ளிட்ட நீர்நிலைகளில் பித்ரு தோஷம் நீங்க முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். நேற்றைய தினம் தை அமாவாசையாகும்.
வட இந்தியாவில் இந்த அமாவாசை மவுனி அமாவாசை என அழைக்கப்படுகிறது. அமாவாசை தினத்தை முன்னிட்டு, உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி கங்கை நதியில் லட்சக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே குவிய தொடங்கினர். கங்கை நதியில் நீராடிய பின்னர் தங்களது குடும்பத்தில் இறந்த முன்னோர்களுக்கு அவர்கள் தர்ப்பணம் கொடுத்தனர்.
வேணி என்றால் சங்கமம் என்று பொருள் திரிவேணி என்றால் மூன்று நதிகள் சங்கமிக்கும் இடமாகும். உத்தரபிரதேச மாநிலம் பிரக்யாராஜ் நகரில் கங்கை, யமுனை, புராண கால சரஸ்வதி நதியும் சங்கமிக்கிறது. இங்கு புனித நீராடி முன்னோர்களை வணங்கலாம். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை இங்கு மகா கும்பமேளாவும் நடைபெறும். லட்சக்கணக்கான பக்தர்களும், சாதுக்களும் இங்கே வந்து முன்னோர்களை வணங்கி நீராடுவர்.
பிரயாகையில் முண்டம், காசியில் தண்டம், கயையில் பிண்டம் என்ற ஒரு வழக்கு உண்டு. முண்டம் என்பது முடி எடுத்தல். உடலில் வளரும் கேசங்கள் தாமாகவே அகலக்கூடியவை. அகற்றினாலும், உபத்திரவம் தாராதவை. அவற்றைப் போல் நம் பாவங்கள் களையப்படவேண்டும் என்பதற்காக இந்த ஷேத்திரத்திலே முடி எடுத்து பாவங்களை களைய வேண்டும். இவற்றின் முக்கிய நோக்கம்,பாவம் களைவது. பாவம் அண்டாமல் தடுப்பது, பாவம் நீங்கி இறையோடு ஒன்றாவது ஆகும்.
பிரயாகையில் முக்கியமானது அட்சயவடம் என்று அழைக்கப்படும் ஆலமரம். இதன் வேர் பகுதி பிரயாகையிலும், நடுப்பகுதி காசியிலும், நுனி கயாவிலும், இருப்பதாக கூறுகிறார்கள். அதனால் இந்த மூன்று இடங்களிலும் வரிசையாக, பித்ரு காரியங்களை செய்ய வேண்டியது தமது கடமை என்று இந்துக்கள் நம்புகிறார்கள்.
காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளர் பிரியங்கா காந்தி நேற்றைய தினம் திரிவேணி சங்கமத்திற்கு தனது மகளுடன் வந்து புனித நீராடினார். தனது பெரிய தாத்தா ஜவகர்லால் நேரு, பாட்டி இந்திராகாந்தியின் நினைவாக மலர்களை தூவி வணங்கினார்.
இதனையடுத்து ஆனந்தபவன் இல்லத்திற்கு சென்று அங்குள்ள ஆதரவற்றவர்களுடன் கலந்துரையாடினார். நேரு குடும்பத்திற்கு சொந்தமான ஆனந்த பவன் இல்லம் இப்போது அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.