எங்களுக்கே ஸ்கெட்ச் போட்டீங்கல்ல.. ராஜஸ்தானில் குடியரசு தலைவர் ஆட்சி வேண்டும்- கொந்தளிக்கும் மாயாவதி
டெல்லி: ராஜஸ்தான் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தவதற்கு ஆளுநர் பரிந்துரை செய்ய வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காங்கிரஸ் அரசை கலைக்க பாஜகவுக்கு எதிரணியிலுள்ள பகுஜன் சமாஜ் கட்சி கேட்பது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டாலும், இதில் கெலாட்டுடன், மாயாவதிக்கு தொடரும் ஒரு பழைய பஞ்சாயத்து பின்னணியும் உள்ளது.
அப்படி என்ன பஞ்சாயத்து என்கிறீர்களா. முதலில் மாயாவதி கூறியதை பார்த்துவிட்டு, அந்த கதையை பார்க்கலாம் வாருங்கள்.
சச்சின் பைலட் புரட்சி.. ராஜஸ்தான் காங்கிரஸுக்குள் கலாட்டா.. ஒரு வழியாக வாய் திறந்தார் வசுந்தரா ராஜே!
மாயாவதி ட்வீட்
கெலாட் அரசை கலைக்க கோரி, மாயாவதி ஹிந்தி மொழியில் டுவிட்களை வெளியிட்டுள்ளார். அதில், அவர் கூறியுள்ளதை பாருங்கள்: ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் கட்சி தாவல் தடைச் சட்டத்தை வெளிப்படையாக மீறிவிட்டார். பகுஜன் சமாஜ் கட்சி எம்எல்ஏக்களை காங்கிரஸ் கட்சியுடன் சேர்த்துக்கொண்டார்.
குடியரசு தலைவர் ஆட்சி
பகுஜன் சமாஜ் கட்சி எம்எல்ஏக்களுடன் ஆளும் தரப்பு பேசிய, தொலைபேசி உரையாடல்களை வைத்துப் பார்க்கும்போது, சட்டவிரோதமாக அரசியல் சாசனத்துக்கு எதிராக கெலாட் செயல்படுவது உறுதியாகியுள்ளது. எனவே ராஜஸ்தானில் நிலவக்கூடிய அரசியல் ஸ்திரமற்ற தன்மையை அம்மாநில ஆளுநர் கருத்தில் கொண்டு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும். அப்படி செய்தால்தான் நாட்டில் ஜனநாயகத்தை காப்பாற்ற முடியும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
கட்சித் தாவல்
2019ஆம் ஆண்டு ராஜஸ்தானில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. அப்போது பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து வெற்றி பெற்ற 6 எம்எல்ஏக்களை அசோக் கெலாட் காங்கிரஸ் கட்சியில் சேர்த்துக்கொண்டு ஆட்சி நடத்தி வருகிறார். இந்த நிலையில்தான் அவர்கள் 6 பேரையும் கட்சி தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று பாஜக சார்பில் ராஜஸ்தான் சபாநாயகருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. இப்போது மாயாவதியும் இதே விவகாரத்தை எழுப்பியுள்ளார்.
கெலாட் vs மாயாவதி
2009ஆம் ஆண்டும் இப்படித்தான், 6 பகுஜன் சமாஜ் கட்சி எம்எல்ஏக்கள் காங்கிரஸில் சேர்க்கப்பட்டனர். அப்போதும் அசோக் கெலாட் ராஜஸ்தான் முதல்வராக இருந்தார். அவரின் இதுபோன்ற தொடர் நடவடிக்கைகள் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைமையை மிகுந்த கோபப்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.