பாஜக அரசியல் செய்ய வழிவகுக்கும் செயல் இது.. ராகுல் மீது மாயாவதி குற்றச்சாட்டு
டெல்லி: ராகுல்காந்தியும் எதிர்க்கட்சியினரும் காஷ்மீருக்கு பயணம் மேற்கொண்டது மத்திய அரசு அரசியல் செய்ய வழி வகை செய்வதற்கு சந்தர்ப்பத்தை கொடுப்பதாக உள்ளது என பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி குற்றம்சாட்டினார்.
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டது. இதையடுத்து காஷ்மீர் இரண்டு யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
இந்த நிலையில் காஷ்மீர் மக்களின் மனநிலையை கேட்காமல் அரசாகவே இதுபோன்ற முடிவை எடுத்து விட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.
ஸ்ரீநகர் விமான நிலையம்
மேலும் அங்கு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் குலாம் நபி ஆசாத் காஷ்மீர் பயணம் மேற்கொண்ட போது அவர் ஸ்ரீநகர் விமான நிலையம் அருகே திருப்பி அனுப்பப்பட்டார்.
சீதாராம் யெச்சூரி
இந்த நிலையில் நேற்று முன் தினம் ராகுல் காந்தி தலைமையில் 12 பேர் கொண்ட குழுவினர் காஷ்மீருக்கு பயணம் செய்தனர். இந்த குழுவில் குலாம் நபி ஆசாத், திருச்சி சிவா, டி ராஜா, சீதாராம் யெச்சூரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விமான நிலையம்
அவர்களை காஷ்மீர் நிர்வாக அரசு திருப்பி அனுப்பியது. அவர்களால் சட்டம் ஒழுங்கு பாதித்து அமைதிக்கு குந்தகம் விளையும் என கூறிய ஸ்ரீநகர் விமான நிலையத்திலேயே அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.
சட்டப்பிரிவு நீக்கம்
இதுகுறித்து பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கூறுகையில் இந்தியாவின் ஒற்றுமைக்கு ஆதரவாக அம்பேத்கர் இருந்ததால்தான் ஜம்மு காஷ்மீருக்கான 370 சட்டப்பிரிவுக்கு அவர் ஆதரவு தெரிவிக்கவில்லை. அதனால்தான் பிஎஸ்பி கட்சி சார்பில் 370 சட்டப்பிரிவு நீக்கத்துக்கு நாங்கள் ஆதரவு தெரிவித்தோம்.
மாயாவதி
69 ஆண்டுகளாக 370 சட்டப்பிரிவு அமலில் இருந்துவிட்டு தற்போது அது நீக்கம் என்றவுடன் காஷ்மீரில் இயல்பு நிலை திரும்ப கொஞ்சம் நாள் ஆகும். ராகுல்காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் காஷ்மீருக்கு பயணம் செய்திருக்கக் கூடாது. பாஜக அரசு அரசியல் செய்ய இவர்கள் சந்தர்ப்பத்தை வழி வகுத்து கொடுக்கின்றனர் என்றார் மாயாவதி.