புல்வாமா தாக்குதல் குறித்து இந்தியாவின் அறிக்கை மீதான பாக்.பதில் அதிருப்தி ஏற்படுத்துகிறது- இந்தியா
டெல்லி: புல்வாமா தாக்குதல் அறிக்கை மீது பாகிஸ்தான் அளித்த பதில் அதிருப்தியை ஏற்படுத்துகிறது என இந்தியா தெரிவித்துள்ளது.
கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி சிஆர்பிஎஃப் படை வீரர்கள் மீது தீவிரவாதி நடத்திய தற்கொலை படைத் தாக்குதலில் 40 வீரர்கள் பலியாகினர். இதற்கு ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்ட போதிலும் இதில் பாகிஸ்தானுக்கு எந்த தொடர்பும் இல்லை என அந்நாடு கூறிவந்தது.
புல்வாமா தாக்குதலில் ஜெய்ஷ் இ முகமது அமைப்புக்கு தொடர்பிருப்பதாக முழு விவரங்கள் அடங்கிய அறிக்கையை இந்திய அரசு பாகிஸ்தானிடம் ஒப்படைத்தது. 91 பக்கங்களை கொண்ட அறிக்கையில் 6 பகுதிகளாக உள்ளது.
அதில் 2 மற்றும் 3 பகுதிகள் புல்வாமா தாக்குதலுக்குள்ளானது. அந்த அறிக்கையில் அந்த இயக்கத்தின் தலைவன் மசூத் அசார் பாகிஸ்தான் மண்ணில் இருப்பது உள்பட அனைத்து தகவல்களையும் தாக்கல் செய்தது.
புல்வாமா தாக்குதல்.. செல்லாது, செல்லாது.. இந்தியாவிடம் அடம் பிடிக்கும் பாகிஸ்தான்
இதற்கு பதில் அளித்துள்ள பாகிஸ்தான், இந்தியா கூறிய 22 இடங்களில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டோம். ஆனால் அங்கு அவர்கள் கூறுவதை போல் பயங்கரவாத அமைப்புகள் ஏதும் இல்லை,. புல்வாமா தாக்குதலில் தொடர்புடையதாக கூறப்படும் 54 பேருக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை என பாகிஸ்தான் கூறியுள்ளது.
இதுகுறித்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் கூறுகையில் கடந்த 2008-ஆம் ஆண்டு மும்பையில் நடந்த தாக்குதல் சம்பவம் மற்றும் 2016-இல் பதான்கோட் தாக்குதல் சம்பவம் ஆகியவற்றில் பாகிஸ்தான் கடந்த காலங்களில் கூறியதையே தற்போதும் கூறியுள்ளதை பார்க்கும் போது அதிர்ச்சியாக உள்ளது.
மசூத் அஸார் பாகிஸ்தானில் இருப்பதாக அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சகமே கூறியுள்ளது. இந்த நிலையில் புல்வாமா தாக்குதல் குறித்து இந்தியாவின் அறிக்கை மீதான பாகிஸ்தான் பதில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என இந்தியா தெரிவித்துள்ளது.