ஃபாலோ செய்த மீடியாக்கள்.. திடீரென தடுத்த போலீஸ்.. விகாஸ் துபே என்கவுண்டருக்கு முந்தைய பரபர வீடியோ
டெல்லி: தாதா விகாஸ் துபே (vikas dubey) இன்று என்கவுண்டர் செய்யப்பட்டுள்ள நிலையில், அதற்கு சில நிமிடங்கள் முன்பாக மீடியா வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.
Recommended Video
உத்தரபிரதேசத்தின் கான்பூரில் பிரபல தாதாவாக இருந்தவர் விகாஸ் துபே. கொலை, ஆள்கடத்தல் உட்பட 60க்கும் மேற்பட்ட வழக்குகள் இவர் மீது உள்ளன.
கொலை முயற்சி வழக்கு ஒன்றில் கைது செய்வதற்காக கடந்த 2ம் தேதி இரவில் விகாஸ் துபே கிராமமான பிக்ருவுக்கு போலீசார் சென்றனர். அப்போது தனது கூட்டாளிகளுடன் இணைந்து போலீசார் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுவிட்டு விகாஸ் துபே தப்பியுள்ளார்.
ஐ-பேக் அலுவலகத்தில் இருந்து வெளியேறும் ஊழியர்கள்... தகுதியான புதிய ஆட்களுக்கு பஞ்சம்..?
8 போலீஸ்காரர்கள் சுட்டுக் கொலை
இந்த திடீர் தாக்குதலில் டிஎஸ்பி உள்பட 8 போலீஸ்காரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 7 பேர் காயமடைந்தனர். நாடு முழுக்க இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விகாஸ் துபே மற்றும் அவரது கூட்டாளிகளை பிடிக்க 25க்கும் மேற்பட்ட தனிப்படை போலீசார் களத்தில் இறக்கப்பட்டனர். அடுத்தடுத்து விகாஸ் துபேயின் கூட்டாளிகள் கைது செய்யப்பட்டனர்.
கூட்டாளிகள் என்கவுண்டர்
துபேயின் 2 கூட்டாளிகள் 3ம் தேதி போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதேபோல விகாஸ் துபேயின் நெருங்கிய கூட்டாளி தயாசங்கர், போலீசார் வருகை பற்றி துபேவுக்கு துப்பு கொடுத்த போலீஸ்காரர்கள் உட்பட பலர் கைது செய்யப்பட்டனர். நேற்று மேலும் ஒரு கூட்டாளி என்கவுண்டர் செய்யப்பட்டார்.
மத்திய பிரதேசத்தில் பதுங்கல்
இந்த நிலையில் விகாஸ் துபே போலீசிடம் சிக்காமல் தொடர்ந்து தலைமறைவாகவே இருந்தார். உ.பி. போலீசாருக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு, மத்திய பிரதேசம் சென்றுவிட்டார் விகாஸ் துபே. உஜ்ஜைனில் உள்ள புகழ் பெற்ற கோவிலுக்குள் விகாஸ் துபே ஒளிந்து இருந்தார். கோவில் என்பதால் போலீசாரால் என்கவுண்டர் செய்ய முடியாது என விகாஸ் திட்டமிட்டேதான் கோவில் வளாகத்தில் இருந்துள்ளார். மேலும், இவர் கைது செய்யப்பட்டதுமே, மீடியாக்களுக்கு அவர் ஆதரவாளர்கள் தகவல் கொடுத்துள்ளனர்.
பின் தொடர்ந்த மீடியா வாகனங்கள்
விகாஸ் துபே கோவிலிருந்து வெளியே அழைத்து வரப்படுவதற்குள், மீடியாக்கள் சுற்றி வளைத்துவிட்டனர். இதனால் காவல்துறையினர் விகாஸ் துபேயை மிகவும் கண்ணியமாக அழைத்துச் சென்றனர் (செல்ல வேண்டியதாயிற்று). நேற்று விசாரணையை முடித்துக் கொண்டு கான்பூருக்கு காரில் விகாஸ் துபே அழைத்து வரப்பட்டார். 10க்கும் மேற்பட்ட போலீஸ் வாகனங்கள் முன்னும் பின்னும் பாதுகாப்புக்குச் சென்றன. அந்த வாகனங்களின் பின்னால் மீடியா வாகனங்களும் வீடியோகிராபர்களுடன் அணிவகுத்துச் சென்றன. இந்த நிலையில்தான், இன்று காலை, ஜான்சி மற்றும் கான்பூர் ஆகிய நகரங்களுக்கு இடையே கார் வந்து கொண்டிருந்தபோது, திடீரென ஒரு டோல்கேட்டில், மீடியா வாகனங்களை பேரிகேட் போட்டு போலீசார் தடுத்து நிறுத்தினர்.
தடுத்து நிறுத்தம்
சில மீடியாக்காரர்கள் கீழே இறங்கி வந்து, தாங்கள் தடை செய்யப்பட்டதை லைவ் காட்சிகளாக ஒளிபரப்பினர். எதற்காக தடுக்கப்படுகிறார்கள் என்ற விவரம் சொல்லப்படவில்லை. இதன்பிறகு சற்று நேரத்தில்தான், துபே பயணித்த வாகனம் பல்டியடித்துள்ளது. அப்போது அவர் தப்பிச் செல்ல முயன்றுள்ளார். போலீசாரையும் தாக்கியுள்ளார். அப்போது நடந்த என்கவுண்டரில் விகாஸ் துபே சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
விகாஸ் துபே என்கவுண்டர்
முன்னதாக, விகாஸ் துபே உயிருக்கு ஆபத்து இருப்பதாக நேற்று மாலையே உச்சநீதிமன்றத்தில், வழக்கு தொடரப்பட்டுள்ளது. பின்னால் மீடியாக்கள், உச்சநீதிமன்ற வழக்கு போன்றவை இருப்பதால், எப்படியும் என்கவுண்டரிலிருந்து, தப்பித்துவிடுவோம் என்று விகாஸ் துபே நினைத்திருப்பார். ஆனால் அவர் கெட்ட நேரம், நேற்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை எடுக்கப்படவில்லை, மீடியாக்கள் நடுவழியில் தடுக்கப்பட்டன. எனவேதான், அச்சப்பட்டு அவர் தப்பியோட நினைத்து சுட்டுக் கொல்லப்பட்டுவிட்டார் போலும்.
துப்பாக்கிச் சத்தம்
அப்பகுதியில் துப்பாக்கிச் சூடு கேட்டதாக ஏரியாக்காரர் ஒருவர் மீடியாவிடம் கூறினார். ஆனால் காவல்துறையினர் எங்களை அங்கேயிருந்து வெளியேறச் சொன்னார்கள். "நாங்கள் இங்கு கேட்ட சத்தம் துப்பாக்கிச் சூடு.. என்பதை உணர்ந்து அதை பார்க்க ஓடி வந்தோம். ஆனால் நாங்கள் வந்தபோது காவல்துறையினர் எங்களை தடுத்து அனுப்பி வைத்தனர். நாங்கள் வீட்டிற்குச் சென்றோம்" என்று வழிப்போக்கரான ஆஷிஷ் பாஸ்வான் செய்தி ஏஜென்சியிடம் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.