கரூருக்கு ஒரு ஹேப்பி நியூுஸ்.. மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு கவுன்சில் அனுமதி!
டெல்லி: கரூரில் கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளதையடுத்து கரூர் மற்றும் சுற்றுவட்டார மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மத்திய அரசின் ஒப்புதலால் நடப்பு கல்வியாண்டில் இங்கு மாணவர் சேர்க்கை துவங்க உள்ளது.
கரூர் அரசு மருத்துவ கல்லூரிக்கும் முதற்கட்டமாக 150 எம்பிபிஎஸ் இடங்களை ஒதுக்கி இந்திய மருத்துவ கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் தமிழகத்திற்கு கிடைக்கும் மொத்த மருத்துவ படிப்பிற்கான இடங்களும் அதிகரித்துள்ளது.
கரூர் காந்தி கிராமத்தில் கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை 11 லட்சத்து 78 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக முதலில் ரூ229.46 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் எதிர்பார்ததை விட திட்ட மதிப்பீடு சுமார் 40 கோடி அதிகரித்தது.
இடிந்து விழும் நிலையில் தபால் நிலையம்.. பீதியில் பொதுமக்கள்.. பாரிமுனையில் பரபரப்பு
எனினும் அதற்கான நிதியும் தமிழக அரசால் விரைவாக ஒதுக்கப்பட்டு அரசு மருத்துவ கல்லூரி அமைக்கப்பட்டது. 150 மாணவர்கள் சேர்க்கை மற்றும் 800 படுக்கை வசதியுடன் இந்த மருத்துவகல்லூரி கட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2018ம் ஆண்டின் படி தமிழகத்தில் 22 மருத்துவ கல்லூரிகள் இருந்தன. அவற்றின் மூலம் தமிழகத்திற்கு 2900 மருத்துவ படிப்புக்கான இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. திருநெல்வேலி மருத்துவ கல்லூரிக்கு 100 கூடுதல் இடங்களுக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதனால் கரூரையும் சேர்த்து நடப்பு கல்வி ஆண்டில் தமிழகத்திற்கு மொத்தம் 250 மருத்துவ படிப்புக்கான இடங்கள் கூடுதலாக கிடைத்துள்ளது. மதுரை மருத்துவ கல்லூரியில் 95 கூடுதல் இடங்களுக்கான கோரிக்கை நிலுவையில் உள்ளது.
பெரம்பலூர், ஊட்டி, ராமநாதபுரத்தில் மருத்துவ கல்லூரிகள் தொடங்குவதற்கான கோரிக்கையும் நிலுவையில் உள்ளது. திருவள்ளூரிலும் காஞ்சிபுரத்திலும் அரசு மருத்துவக் கல்லூரி கட்ட அனுமதி கேட்டு தமிழக அரசு அழுத்தம் கொடுத்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.