91% பலன்.. ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்கு... இந்தியாவில் அனுமதி? நிபுணர் குழு இன்று ஆலோசனை
டெல்லி: இந்தியாவில் ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்கு அனுமதி கோரிய விண்ணப்பம் குறித்து நிபுணர் குழு இன்று முடிவு எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த இந்தியாவில் கடந்த ஜனவரி 17ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்பட்டது. முதல்கட்டமாக சுகாதார ஊழியர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களுக்குத் தடுப்பூசி வழங்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதற்காக சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு மற்றும் பாரத் பயேடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல ஸ்புட்னிக் வி உள்ளிட்ட சில தடுப்பூசி சோதனைகளும் தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது.
இன்று முடிவு
இந்நிலையில் ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் அவசரக்கால பயன்பாட்டிற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று டாக்டர் ரெட்டி நிறுவனம் விண்ணப்பித்திருந்தது. இந்த விண்ணப்பம் குறித்த முடிவுகளை எடுக்க நிபுணர் குழு இன்று ஒன்றுகூடுகிறது. இந்தியாவில் ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் மருத்துவ சோதனைகளை நடத்தவும் விநியோகிக்கவும் டாக்டர் ரெட்டி நிறுவனத்துடன் ரஷ்யா ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி
கடந்தாண்டு கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நிறுவனங்களும் தடுப்பூசியை தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டனர். அப்போது, யாரும் எதிர்பாராத வகையில் ஆகஸ்ட் மாதம் ஸ்புட்னிக் வி என்ற தடுப்பூசியை ரஷ்யா அறிமுகம் செய்தது. இருப்பினும், சோதனை முடிவுகள் வெளியாகாததால் இந்தத் தடுப்பூசியைப் பயன்படுத்த பல்வேறு நாடுகளும் தயக்கம் காட்டின.
91% தடுப்பாற்றல்
இதையடுத்து கடந்த சில வாரங்களுக்கு முன், தடுப்பூசியின் சோதனை முடிவுகள் வெளியானது. அதில் ஸ்புட்னிக் வி 91.6% வரை பலன் அளிப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. பைசர், மாடர்னா தடுப்பூசிகளுக்குப் பின், அதிக தடுப்பாற்றல் கொடுக்கும் மருந்தாக ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி உள்ளது. இதுவரை சுமார் 26 நாடுகள் ஸ்புட்னிக் வி பயன்பாட்டிற்கு அனுமதி அளித்துள்ளன.
விலை குறைவு
வெறும் 10 டாலர்கள் (ரூ. 720) செலவில் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை உற்பத்தி செய்ய முடியும். இது ஆக்ஸ்போர்ட் தடுப்பூசியை விட சற்று விலை அதிகம்தான். இருப்பினும், ஆக்ஸ்போர்ட் தடுப்பூசி சுமார் 70% மட்டுமே தடுப்பாற்றல் அளிக்கிறது. ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி அதிக தடுப்பாற்றல் தருவதாலும் பாதுகாப்பானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளதாலும் விரைவில் இந்தியாவிலும் ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது