காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹபூபா முப்தி தடுப்பு காவல் 3 மாதங்கள் நீட்டிப்பு.. வீட்டிலேயே சிறை
டெல்லி: ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹபூபா முப்தி, பொது பாதுகாப்புச் சட்டத்தின் (பிஎஸ்ஏ) கீழ் மேலும் மூன்று மாதங்களுக்கு தடுத்து வைக்கப்படுவார் என்று, அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.
முன்னாள் அமைச்சரும் மூத்த தேசிய மாநாட்டு கட்சி தலைவருமான அலி முகமது சாகர் மற்றும் பி.டி.பி மூத்த தலைவரும் முப்தியின் உறவுக்காரர், சர்தாஜ் மதானியின் தடுப்பு காவலும் மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டது.
ஆகஸ்ட் 5 ம் தேதி முப்தி, உமர் அப்துல்லா மற்றும் அவரது தந்தை மற்றும் முன்னாள் முதல்வர் பாரூக் அப்துல்லா உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் அதிகாரிகளால் தடுப்பு காவலில் வைக்கப்பட்டனர். பாருக் அப்துல்லா மற்றும் உமர் அப்துல்லாவின் தடுப்பு காவல் மார்ச் மாதத்தில் ரத்து செய்யப்பட்டது.
துணை சிறைச்சாலையாக மாற்றப்பட்டுள்ளது மெஹபூபா முப்தியின் 'Fair View' என்ற அரசு இல்லம். அங்குதான் தற்போது அவர் தங்க வைக்கப்பட்டுள்ளார். சாகரும் மதானியும் குப்கர் சாலையில் உள்ள அரசு தங்குமிடத்தில் உள்ளனர்.
இதனிடையே, இந்த முடிவு நம்பமுடியாத கொடூரமானது மற்றும் பிற்போக்குத்தனமானது என்று தேசிய மாநாட்டின் தலைவர் ஒமர் அப்துல்லா விமர்சித்துள்ளார்.
வெளிநாடுவாழ் இந்தியர்களே உஷார்.. வலையில் வீழ்த்த வைரலாக சுற்றும் 'லிங்க்'
"கடந்த சில நாட்களாக ஜம்மு காஷ்மீரில் இயல்பான நிலை திரும்பிவிட்டதாக கூறி வருகிறது மத்திய அரசு. மெஹபூபா முப்தியின் தடுப்புக்காவல் நீட்டிப்பு என்பது பிரதமர் நரேந்திர மோடி ஜம்மு காஷ்மீரை பல தசாப்தங்கள் பின்னுக்குத் தள்ளிவிட்டதற்கு ஒரு சான்று", என்று அவர் மேலும் கூறினார்.
ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்து லடாக், ஜம்மு-காஷ்மீர் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது முதல் அங்கு அரசியல் தலைவர்கள் மீதான கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது.