கடன் மோசடி.. இந்தியாவுக்கு நாடு கடத்துவதை தடுக்க மாஸ்டர் பிளான் போட்ட மோசடி மன்னன் மெகுல் சோக்சி
டெல்லி: இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவதை தவிர்க்கும் வகையில் இந்திய குடியுரிமையை மெகுல் சோக்சி ஒப்படைத்தார்.
பிரபல வைர வியாபாரியான நிரவ் மோடியும், அவருடைய நெருங்கிய உறவினரான மெகுல் சோக்சியும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,000 கோடிக்கு மேல் கடன் பெற்று மோசடி செய்தது கடந்த சில மாதங்களுக்கு முன் தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவர்கள் வெளிநாடுகளில் தப்பி ஓடிவிட்டனர்.
கீதாஞ்சலி குழும உரிமையாளரான மெகுல் சோக்சி, ஆண்டிகுவாவில் இருப்பது தெரியவந்தது. அவரை இந்தியா கொண்டு வரும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. குற்றவாளிகளை நாடு கடத்தும் ஒப்பந்தம் ஆண்டிகுவாவுடன் ஏற்படுத்தப்படவில்லை. இதனால் சோக்சியை இந்தியா கொண்டு வருவதில் சிக்கல் நீடிக்கிறது.
அவரிடம் ஆண்டிகுவா மற்றும் இந்தியாவின் குடியுரிமைகள் இருந்தன. ஒருவர் இரு குடியுரிமையை வைத்திருக்க கூடாது என்ற சட்டம் உள்ளது. இந்த நிலையில், சோக்சி தனது இந்திய குடியுரிமையை விடுவதற்கு முடிவு செய்து தனது இந்திய பாஸ்போர்ட்டை ஆண்டிகுவாவில் உள்ள இந்திய தூதரகத்தில் ஒப்படைத்துள்ளார்.
ஏராளமான வங்கி மோசடிகளில் சோக்சி ஈடுபட்டுள்ளதால் அவரை இந்தியாவுக்கு கொண்டு வர மத்திய அரசு முயற்சித்து வருகிறது. இதனால் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவதை தடுக்க இந்திய குடியுரிமையை ஒப்படைத்தார்.