மேகதாது பற்றி இங்கே பேசக்கூடாது.. காவிரி மேலாண்மை ஆணையத்தில் தமிழக அரசு அதிரடி
டெல்லி: மேகதாது விவகாரத்தை, காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் ஆலோசிக்க கூடாது என்று தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
காவிரி மேலாண்மை ஆணைய 3வது கூட்டம் டெல்லியில் உள்ள மத்திய நீர்வள ஆணைய அலுவலகத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்திற்கு, காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் மசூத் உசைன் தலைமை வகித்து வருகிறார்.
காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு உட்பட்ட தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின், பிரதிநிதிகளாக, நீர்வளத்துறை உயர் அதிகாரிகள், இதில் பங்கேற்றுள்ளனர்.
என்ன டிராமா பண்றீங்களா திருமாவளவன்? கச்சத் தீவு விவகாரத்தில் தமிழிசை காட்டம்!
காவிரி ஆணைய கூட்டம்
கர்நாடக அரசு அளித்துள்ள மேகதாது திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை குறித்த விவாதத்தை, காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் பொருள் நிரலாக சேர்த்ததற்குக் தமிழக அரசு இக்கூட்டத்தில் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மேகதாது திட்டத்துக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் காவிரி ஆணைய கூட்டத்தில் மேகதாது பற்றி விசாரிக்க கூடாது என்பது தமிழக அரசு வாதமாக இருந்தது.
விரிவான திட்ட அறிக்கை
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கர்நாடக அரசு அளித்துள்ள மேகதாது திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை குறித்த விவாதத்தை இக்கூட்டத்தில் ஒரு பொருள் மேலாக சேர்க்கப்பட்டதற்கு தமிழ்நாடு அரசின் சார்பில் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இத்திட்டம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்துள்ள வழக்கு நிலுவையில் உள்ளது.
தமிழக அரசு வலியுறுத்தல்
மேகதாதுவில் அணை கட்டும் திட்டம், காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணையையையும் மற்றும் 16. 2.2018 ஆம் நாளிட்ட உச்சநீதிமன்ற தீர்ப்பினையும், மீறும் செயலாக உள்ளதால், இப் பொருள் குறித்த கூட்ட நிகழ்ச்சி நிரலை திரும்பப்பெற வேண்டும். இனிவரும் காலங்களில் நடைபெறும் கூட்டங்களிலும், இப்பொருளை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளக் கூடாது எனவும் வலியுறுத்தப்பட்டது.
மேட்டூர் அணை
அடுத்த பாசன பருவம் ஜூன் மாதம் 1ம் தேதி துவங்க உள்ளது. காவிரி டெல்டா விவசாயிகள் குறுவை சாகுபடி மேற்கொள்வதற்கு மேட்டூர் அணையில் இருந்து நீர் விடுவிப்பதை மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். ஜூன் மாதத்தில் தமிழ்நாடுக்கு உரிய 9.2 டிஎம்சி அடி நீரையும், மற்றும் அதன் பிறகு உச்ச நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளபடி எவ்வித குறைபாடும் இன்றி ஒவ்வொரு மாதமும் கர்நாடக அரசு நீரை விடுவிக்க ஆணையிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
உடனடியாக விடுவியுங்கள்
சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரையில் ஒவ்வொரு மாதமும் 2.5 டிஎம்சி அடி நீர் வீதம், தமிழ்நாட்டுக்கு அளிக்க வேண்டிய நீரை கர்நாடக அரசு முழுமையாக அளிக்கவில்லை. இதனால் ஏற்பட்டுள்ள குறைபாடு நீரான 2 டிஎம்சி அடி நீரை, மே மாதத்திற்குள் உடனடியாக விடுவிக்க கர்நாடக அரசுக்கு உத்தரவு வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இவ்வாறு தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கோரிக்கையை கூட்டம் ஏற்று கொண்டால் நீண்ட நாட்களுக்கு மேகதாது பிரச்சனையில் இருந்து தமிழகம் தப்பிக்க வாய்ப்பு கிடைக்கும்.