மேகதாது அணைக்கு எதிர்ப்பு.. தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு
மேகதாது அணைக்கு அனுமதி அளிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது.
டெல்லி: மேகதாது அணைக்கு அனுமதி அளிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது.
கர்நாடகாவின் கூடுதல் நீர் தேவையை பூர்த்தி செய்யவும், காவிரி நீரை இன்னும் அதிகமாக பெறவும் திட்டம் தீட்டி காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட முடிவெடுத்து இருக்கிறது. இதற்காக வரைவு அறிக்கையை அம்மாநில அரசு மத்திய அரசிடம் சமர்ப்பித்து இருந்தது.
இந்த நிலையில் தற்போது மத்திய அரசு இந்த அறிக்கைக்கு ஒப்புதல் வழங்கி உள்ளது. உச்ச நீதிமன்ற இறுதி தீர்ப்பை மீறி மத்திய அரசு இந்த செயலை செய்துள்ளது. இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் தமிழக அரசு தற்போது அதிரடியாக செயல்பட்டு மேகதாது விவகாரத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது. உச்ச நீதிமன்ற இறுதி தீர்ப்பை மீறி கர்நாடக அரசு செயல்பட்டு இருப்பதாக தமிழக அரசு வழக்கு தொடுத்து இருக்கிறது.
கர்நாடக அரசு, கர்நாடக நீர்ப்பாசன துறை அமைச்சர் டி.கே.சிவகுமார், காவிரி மேலாண்மை வாரிய தலைவர் மசூத் உசேன், அனுமதி அளித்த மத்திய அரசு உள்ளிட்ட ஐவர் மீது வழக்கு தொடுக்கப்பட்டு இருக்கிறது.
மேகதாது ஆணை விவகாரம் தொடர்பாக நாளை தமிழக சட்டசபை கூட உள்ளது. இதில் இந்த பிரச்சனை தொடர்பாக சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட இருக்கிறது.
இந்த நிலையில் தற்போது வழக்கு தொடுக்கப்பட்டு இருப்பது கவனம் பெறுகிறது. இந்த வழக்கு எப்போது விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.