மேகதாது.. தமிழகத்திற்கு எதிராக கர்நாடகா போராட்டம்.. நிர்மலா சீதாராமன் பங்கேற்கிறார்
Recommended Video
டெல்லி: மேகதாது அணை கட்டுவது தொடர்பாக டெல்லியில் கர்நாடக எம்.பிக்கள் போராட்டம் நடத்த முடிவு செய்து உள்ளனர். இந்த போராட்டத்தில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சரும், தமிழகத்தைச் சேர்ந்தவருமான நிர்மலா சீதாராமனும் கலந்து கொண்டு தமிழகத்திற்கு எதிராக கோஷமிட்டு போராடப் போகிறார்.
மேகதாது அணை கட்டுவதற்கு எதிராக தமிழக எம்.பிக்கள் நாடாளுமன்றத்தில் போராடி வருகிறார்கள். தமிழகத்தை சேர்ந்த அனைத்து எம்.பிக்களும் தினமும் நாடாளுமன்றத்தில் போராடி வருகிறார்கள்.
இதனால் நாடாளுமன்ற குளிர்கால கூட்ட தொடரே முடங்கி உள்ளது. இந்த நிலையில் இந்த போராட்டத்திற்கு எதிராக கர்நாடக எம்.பிக்கள் முடிவு செய்துள்ளனர்.
விவாதம்
இந்த பிரச்சனை குறித்து விவாதம் செய்வதற்காக டெல்லியில் கர்நாடக எம்.பிக்கள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் சதானந்த கவுடா, ஆனந்தகுமார் ஹெக்டே, முன்னாள் பிரதமர் தேவ கவுடா, கர்நாடக மாநில நீர்வளத்துறை அமைச்சர் டி.கே சிவக்குமார் கலந்து கொண்டனர். இதில் முக்கியமானவர் பாஜகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்தான், இவர் தமிழகத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
கூட்டத்தில் முடிவு
இந்த கூட்டம் சுமார் 2 மணி நேரம் நடந்தது. கூட்டத்தின் முடிவில், மேகதாது அணை கட்டுவது தொடர்பாக டெல்லியில் கர்நாடக எம்.பிக்கள் போராட்டம் நடத்த முடிவு செய்து உள்ளனர். வரும் டிசம்பர். 27ம் தேதி நாடாளுமன்றத்தில் உள்ள காந்தி சிலை முன் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
பதில் போராட்டம்
தமிழக எம்.பிக்களின் போராட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கர்நாடக மாநில எம்பிக்கள் எல்லோரும் இதில் கலந்து கொள்ள இருக்கிறார்கள். அதேபோல் எம்எல்ஏக்களும் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள வாய்ப்புள்ளது.
நிர்மலா சீதாராமன்
அமைச்சர் நிர்மலா சீதாராமனும் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள முடிவு செய்துள்ளார். அமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழகத்தை சேர்ந்தவர். ஆனால் அவர் கர்நாடகாவில் இருந்து ராஜ்யசபா எம்.பியாக இருக்கிறார். இதைக் காரணம் வைத்து அவர் எப்போதுமே கர்நாடகத்திற்கு ஆதரவாகவே பேசி வருவது வழக்கம். காவிரி கண்காணிப்பு வாரியம் அமையக் கூடாது என்று கோரி கர்நாடகம் டெல்லியில் நடத்திய லாபியிலும் இவர் முக்கியமாக பங்கேற்றிருந்தார். இந்த நிலையில் தற்போது தமிழகத்திற்கு எதிராக டெல்லியில் போராட உள்ளார்.