100 நாள் வேலை வாய்ப்புக்கு குறைகிறதா மவுசு... காரணம் என்ன?
டெல்லி: தென்மேற்கு பருவமழை காலங்களில் காரிப் பருவத்தில் விவசாயம் செய்வதற்கு ஆட்கள் அதிகம் தேவைப்படுவதால், மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புக்கு கடந்த ஜூலை மாதத்தில் மவுசு குறைந்து இருப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
தென்மேற்கு பருவமழை பெறும் மாநிலங்களில் அதிகமாக ஜூலை மாதத்தில் இருந்து பயிர் நடவு செய்ய துவங்குவார்கள். இதை காரிப் பயிர் என்று அழைக்கின்றனர். தற்போது மழை பெய்யத் துவங்கி இருப்பதால் விவசாயம் சூடுபிடித்துள்ளது.
மறுபக்கம் கொரோனா பரவல் தொற்று காரணமாக கிராமங்களில் மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் துரிதப்படுத்தின,. அதற்கான வழிமுறைகளையும் அறிவித்து இருந்தன. தமிழகத்தில் இந்த திட்டத்துக்கு கிராமங்களில் அதிக வரவேற்பு இருக்கிறது. இதற்கென ஆன்லைன் சேவையும் இருக்கிறது. இதில் விவசாய பூமி வைத்திருப்பவர்கள் தங்களது தகவல்களை பதிவு செய்து கொள்ளலாம். 100 நாள் வேலையில் ஈடுபடுபவர்கள் இந்த விவசாய நிலங்களுக்கு அழைத்து வரப்பட்டு, பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
கொரோனா பொது முடக்கம் காரணமாக வேலை வாய்ப்பு இல்லாமல் மக்கள் இருப்பதாலும், இடம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இந்த நிலையில் பல மாநிலங்களிலும் விவசாயம் தற்போது சூடுபிடித்துள்ளது.
கடந்த ஆண்டைக் காட்டிலும் நடப்பாண்டில் 100 நாள் வேலைக்கு அதிக தேவை இருந்தாலும், விவசாயத்திற்கு அதிகளவில் மக்கள் சென்று விட்டதால், கடந்த ஜூலை மாதத்தில் 100 நாள் வேலைக்கு மக்கள் அதிகளவில் செல்லவில்லை.
500 மில்லியன் டோஸ் கொரோனா தடுப்பூசி.. 2.1 பில்லியன் டாலரை கொட்டுகிறது அமெரிக்கா
மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் இருந்து கிடைத்து இருக்கும் புள்ளி விவரத்தில், கடந்த ஜூலை மாதம் 31ஆம் தேதி வரை இந்த திட்டத்தில் பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை 31.5 மில்லியன் குடும்பமாக உள்ளது. இது இதற்கு முந்தைய ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில் 28 சதவீதம் குறைவாகும்.
ஆனாலும், கடந்த 2019ஆம் ஆண்டில் ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில், நடப்பாண்டில் ஜூலை மாதத்தில் 71 சதவீதம் அதிகமாக 100 நாள் வேலைக்கு பதிவு செய்துள்ளனர். 2019, ஜூலை மாதத்தில் 18.4 மில்லியன் குடும்பங்கள் 100 நாள் வேலைக்கு பதிவு செய்து இருந்தன. நாள் கணக்கு அடிப்படையில் கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் 245.23 மில்லியன் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் மாதத்தில் இருந்து ஜூலை வரை மொத்தம் 1.6 பில்லியன் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த வேலை வாய்ப்பு திட்டத்துக்கு என்று ஒதுக்கப்பட்ட 1,01,500 கோடியில் இருந்து 50 சதவீதம் கடந்த நான்கு மாதங்களில் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.