இரவு நேர ஊரடங்கை முழுமையாக கடைபிடிக்க வேண்டும்- மாநிலங்களுக்கு உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை
டெல்லி: நாடு முழுவதும் இரவு நேர ஊரடங்கை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என்று மாநிலங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கையுடனான அறிவுறுத்தலை விடுத்துள்ளது.
கொரோனா பரவுவதைத் தடுக்க 4-ம் கட்டமாக லாக்டவுன் அமல்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த லாக்டவுன் காலத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.
இருப்பினும் இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரையில் பொதுமக்கள் நடமாட்டம் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் உள்துறை செயலாளர் அஜய் பல்லா, அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கும் ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்.
ஒவ்வொரு கட்டமாக ரயில் நிலைய டிக்கெட் கவுன்ட்டர்கள் திறப்பு- நாளை முதல் முன்பதிவு தொடக்கம்
வழிகாட்டுதல்
அதில், கொரோனா லாக்டவுன் தொடர்பான உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதல்கள் பல மாநிலங்களில் மீறப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. கொரோனாவை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டு வரும் அனைத்து நடவடிக்கைகளையும் அனைத்து மாநில அரசுகளும் யூனியன் பிரதேசங்களும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என கடுமையாக கூறப்பட்டுள்ளது.
சுகாதாரத் துறை கட்டுப்பாடுகள்
நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் எவை, இந்த பகுதிகளில் அமல்படுத்தப்பட வேண்டிய கட்டுப்பாடுகள் ஆகியவற்றை முறையாக உள்ளூர் அதிகாரிகள் செயல்படுத்த வேண்டும். இது தொடர்பாக சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட வழிகாட்டுதல்களை அனைத்து மாநில அரசுகளும் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
இரவு ஊரடங்கு
மேலும் இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை பொதுமக்கள் நடமாட்டத்தை அனுமதிக்கக் கூடாது என்று உள்துறை அமைச்சகம் ஏற்கனவே வழிகாட்டுதல்களில் தெரிவித்துள்ளது. நோய் பரவுவதைத் தடுக்கவும் சமூக விலகலை கடைபிடிக்கவும் இந்த இரவு நேர கட்டுப்பாடுகள் அவசியம். இந்த இரவு நேர ஊரடங்கை உள்ளூர் அதிகாரிகள் முழுவீச்சில் செயல்படுத்த உத்தரவிட வேண்டும்.
கொரோனா தடுப்பு நடவடிக்கை
அத்துடன் முக கவசம் அணிதல், பணி இடங்கள், பொது போக்குவரத்து ஆகியவற்றில் சமூக விலகலை கடைபிடித்தல், சுகாதாரமான செயற்பாடுகளை பின்பற்றுதல் ஆகியவையும் மிக முக்கியமானவை. இவற்றையும் உள்ளூர் அதிகாரிகள் பின்பற்றுவதற்கு உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது.