எங்கள் அறிவிப்பிற்கும் சிஏஏ சட்டத்திற்கும் தொடர்பில்லை.. உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு திட்டவட்டம்
டெல்லி: அகதிகளுக்குக் குடியுரிமை வழங்குவது தொடர்பாக அரசு கடந்த மே 28ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பிற்கும் சிஏஏ-க்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றும் நாட்டில் எந்த மதத்தினரும் எப்போது வேண்டுமானாலும் குடியுரிமை கோரி விண்ணப்பிக்கலாம் என்றும் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
பொதுவாக அண்டை நாடுகளிலிருந்து நாட்டில் தஞ்சம் புகுபவர்களுக்கு சில குறிப்பிட்ட விதிகளைப் பின்பற்றி குடியுரிமை வழங்கப்படும். அவர்கள் ஒரு குறிப்பிட்ட காலம் நாட்டில் தங்க வேண்டும், முறையாக நாட்டில் நுழைந்திருக்க வேண்டும் உள்ளிட்ட சில விதிகள் இருக்கும்.
இணையதள சேவையை முடக்குவது ஜனநாயகத்திற்கு ஆபத்தானது.. ஜி 7 நாடுகள், இந்தியா வெளியிட்ட கூட்டறிக்கை
அதன்படி குஜராத், சத்தீஸ்கர், ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் 13 மாவட்டங்களில் உள்ள அகதிகளுக்கு தற்போதைய விதிகளின் கீழ் குடியுரிமை வழங்கப்படும் எனக் கடந்த மே 28ஆம் தேதி மத்திய அரசு அறிவித்திருந்தது.
குடியுரிமை அறிவிப்பு
ஐந்து மாநிலங்களில் உள்ள 13 மாவட்டங்களில் இருக்கும் இந்துக்கள், சீக்கியர்கள், பவுத்தர்கள், சமணர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட சமூகங்களைச் சேர்ந்த அகதிகளுக்குக் குடியுரிமை வழங்கும் பணிகளை தொடங்க மத்திய அரசு அறிவித்திருந்தது. இதற்கான விண்ணப்பங்கள் ஆன்லைனில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தது. இந்த அறிவிப்புகள் குடியுரிமைச் சட்டம், 1955 மற்றும் குடியுரிமை விதிகள், 2009 ஆகியவற்றின் கீழ் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 2019இல் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டத்தின்(சிஏஏ) கீழ் வெளியிடப்படவில்லை.
உச்ச நீதிமன்றத்தில் வழக்கு
இந்நிலையில், மத்திய அரசின் இந்த அறிவிப்பு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சர்ச்சைக்குரிய சிஏஏ சட்டத்தை அமல்படுத்தும் வகையிலேயே மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். இதற்குப் பதிலளித்த மத்திய அரசு வழக்கறிஞர், கடந்த மே 28இல் வெளியான அறிவிப்பு என்பது குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில் உள்ளூர் அதிகாரிகளுக்குக் குடியுரிமையை வழங்கும் அதிகாரத்தை ஒப்படைப்பதாகத் தெரிவித்தார்.
சிஏஏவுக்கு தொடர்பில்லை
இது குறித்து மத்திய அரசு தாக்கல் செய்திருந்த பிரமாண பத்திரத்தில், குடியுரிமைச் சட்டத்தின் பிரிவு 16 இன் கீழ் மத்திய அரசு தனது அதிகாரத்தைப்பயன்படுத்தி, வெளிநாட்டிலிருந்து அகதிகளாக நுழைந்தவர்களுக்கு எளிதாகக் குடியுரிமை கிடைக்க இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. மேலும், இதற்கும் சிஏஏ-வுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை" எனக் கூறப்பட்டது. சிஏஏக்கும் இதற்கும் தொடர்பு இல்லை என்றால், மத்திய அரசின் அறிவிப்பு சிஏஏ-இல் வரும் அதே மூன்று நாடுகள், அதே மூன்று மதங்களைக் குறிப்பிட்டுள்ளது ஏன் என மனுதாரரின் வழக்கறிஞர் கேள்வி எழுப்பியிருந்தார்.
எந்த மதத்தினரும் விண்ணப்பிக்கலாம்
அது குறித்து அரசின் பிரமாண பத்திரத்தில், "மத்திய அரசின் அறிவிப்பு வெளிநாட்டவர்களுக்கு எந்தவிதமான தளர்வுகளையும் அளிக்கவில்லை, சட்டப்பூர்வமாக நாட்டில் நுழைந்தவர்களுக்கு மட்டுமே பொருந்தும். அதாவது பாஸ்போர்ட் மற்றும் இந்திய விசா போன்ற சரியான ஆவணங்களை அவர்கள் வைத்திருக்க வேண்டும். அப்படி வைத்திருப்பவர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் நாட்டில் குடியுரிமை கோரி எப்போது வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம்" என்று கூறப்பட்டிருந்தது.