இந்திய விமானியை பாகிஸ்தான் உடனே விடுதலை செய்ய வேண்டும்: வெளியுறவுத்துறை அறிக்கை
Recommended Video
டெல்லி: இந்திய விமானப்படை பைலட் பாகிஸ்தானிடம் சிக்கியுள்ளதாக கூறப்படுவது உண்மைதான் என்று இந்திய வெளியுறவுத்துறை இன்று மாலை உறுதி செய்துள்ளது.
இந்தியாவைச் சேர்ந்த விமானி அபிநந்தன் தங்கள் வசம் இருப்பதாக பாகிஸ்தான் இன்று மதியம் அறிவித்தது. இது தொடர்பான வீடியோவை வெளியிட்டது. இது தொடர்பாக இன்று மதியம் நிருபர்களிடம் பேட்டியளித்த இந்திய வெளியுறவு துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் ரவீஷ் குமார்,
இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற பாகிஸ்தான் போர் விமானத்தை கண்டறிந்து உடனடியாக பதிலடி கொடுத்தோம். மிக் 21 பைசன் வகை விமானத்தால் பாகிஸ்தான் விமானத்தை சுட்டு வீழ்த்தினோம். பாகிஸ்தான் எல்லைக்குள், பாக். போர் விமானம் நொறுங்கி விழுந்ததை தரைப்படையினர் பார்த்தனர்.
இந்த வேட்டையின்போது, நமது மிக் 21 விமானம் மாயமானது. நமது விமானியை பாகிஸ்தான் பிடித்து வைத்துள்ளதாக கூறியுள்ளது. அதுகுறித்து, விசாரித்து வருகிறோம் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், இன்று மாலை, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
பாகிஸ்தானின் இந்தியாவுக்கான, தூதர் இந்திய வெளியுறவு துறை அமைச்சகத்தால் சம்மன் கொடுத்து அழைக்கப்பட்டார். இந்தியா மீது பாகிஸ்தான் காட்டிவரும் ஆக்ரோஷம் தொடர்பாக கண்டனத்தை பதிவு செய்தோம். பாகிஸ்தானின் விமானப்படை, இந்திய வான் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து இந்திய ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்தியது.
ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பின் முகாம் மீது 26ஆம் தேதி இந்தியா தாக்குதல் நடத்தியது. இது பாகிஸ்தான் ராணுவத்துக்கு எதிரான தாக்குதல் கிடையாது என்ற போதிலும், பாகிஸ்தான், இந்திய ராணுவத்தின் மீது தாக்குதல் நடத்துகிறது. தீவிரவாதிகளுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் கோபத்தை காட்டி வருவது துரதிர்ஷ்டவசமானது.
தேசிய பாதுகாப்பு, இறையாண்மை, எல்லை பாதுகாப்பு ஆகியவற்றில் இந்தியா தொடர்ந்து உறுதி காட்டும், என்று பாகிஸ்தான் தூதருக்கு எடுத்துச் சொல்லப்பட்டது. மேலும் இந்திய விமானப்படையைச் சேர்ந்த காயமடைந்த வீரரை மோசமான வகையில் சித்தரிக்கும் படங்களை பாகிஸ்தான் வெளியிட்டதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
இது மனித உரிமை சட்டம் மற்றும் ஜெனீவா உடன்படிக்கை எதிரானது. இந்திய பாதுகாப்பு வீரருக்கு எந்த ஒரு தொந்தரவும் தரக்கூடாது. அவரை விரைந்து, பாதுகாப்பாக, விடுதலை செய்ய வேண்டும். புல்வாமா தாக்குதலில் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்புக்கு தொடர்பு இருக்கும், தகவல் அடங்கிய குறிப்பு ஏற்கனவே பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டுவிட்டது. தீவிரவாதிகளுக்கு எதிராக பாகிஸ்தான் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாகிஸ்தான் தூதரிடம் வலியுறுத்தப்பட்டது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#WATCH Raveesh Kumar, MEA: One Pakistan Air Force fighter aircraft was shot down by Indian Air Force. In this engagement, we have lost one MiG 21. Pilot is missing in action. Pakistan claims he is in their custody. We are ascertaining the facts. pic.twitter.com/Bm0nVChuzF
— ANI (@ANI) February 27, 2019