என்ன செய்தீர்கள்? பிறமாநில தொழிலாளர் பிரச்சனை.. மத்திய, மாநில அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்!
டெல்லி: புலம்பெயர் தொழிலாளர்கள் நலனுக்காக, இதுவரை என்னென்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள் என்று கேள்வி எழுப்பி மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அளித்துள்ளது.
கொரோனா பாதிப்பு இந்தியா முழுக்க மிக மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளது. மே 31ம் தேதி வரை நாடு முழுக்க ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.நாடு முழுக்க பல்வேறு இடங்களில் பிற மாநில தொழிலார்கள் உணவு இன்றி மாட்டிக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.
அதே சமயம் வெவ்வேறு மாநிலங்களில் வசிக்கும் வெளி மாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.ஆனால் சில மாநிலங்களில் மக்களுக்கு போதுமான போக்குவரத்து வசதி ஏற்பாடு செய்யப்படவில்லை.
கட்டுமானம், ரியல் எஸ்டேட் துறைக்கு பெரிய அடி.. புலம்பெயர் தொழிலாளர் ஊருக்கு போனதால் உருவான சிக்கல்
உச்ச நீதிமன்ற வழக்கு
இதில் பலர் சாலை விபத்தில், ரயில் விபத்திலும் பலியாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வெளிமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு நடந்தே செல்வது வழக்கமாகி உள்ளது. இந்த நிலையில் இத்தனை நாள் பிரச்னைக்கு பின் பிற மாநில தொழிலாளர்கள் பிரச்சனையை உச்ச நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்தது. உச்ச நீதிமன்ற நீதிபதி அசோக் பூஷன் மற்றும் நீதிபதிகள் சஞ்சய் கிஷான் கவுல், எம்ஆர் ஷா அமர்வு இன்று விசாரணைக்கு எடுத்தது.
என்ன விசாரணை
இந்த விசாரணையின் போது மத்திய அரசு சார்பாக ஆஜரான சொலிஸ்டர் ஜெனரல் துஷார் மேத்தா மீது உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்விகளை எழுப்பியது. உச்ச நீதிமன்றம் இன்றைய விசாரணையில், நாடு முழுக்க பிற மாநில தொழிலாளர்கள் கைவிடப்பட்டு இருக்கிறார்கள். மத்திய மாநில அரசுகள் இந்த பிரச்சனையை சரியாக கையாளவில்லை. இப்போதும் கூட பிற மாநில தொழிலாளர்களின் பிரச்சனை தொடர்ந்து நீடித்து வருகிறது.
மக்கள் அவதி
சாலைகளில், நடு ரோட்டில் மக்கள் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இவர்களுக்கு உணவு கூட இல்லை. மாநில எல்லைகளில் பலர் இப்போதும் இருப்பிடம் இன்றி அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. மாநில, மத்திய அரசுகள் இதில் பெரிய அளவில் பின்னடைவை சந்தித்துள்ளது. இதில் உடனடியாக மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். துரிதமான நடவடிக்கைகளை அரசு செய்ய வேண்டும்,
கண்ணீர் வருகிறது
செய்திகளில் பிற மாநில தொழிலார்களின் நிலையை பார்க்க கண்ணீர் வருகிறது. அவர்கள் வெறும் காலில் பல நூறு கிலோ மீட்டர் நடந்து செல்கிறார்கள். சிறுமிகள் கூட பெற்றோரை வைத்து பல ஆயிரம் கிலோ மீட்டர் சைக்கிளில் செல்கிறார்கள். இந்த லாக்டவுன் காரணமாக ஒரு பிரிவு மக்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
நோட்டீஸ் அனுப்பியது
இவர்களை உடனே காக்க வேண்டியது அரசின் கடமை, என்று உச்ச நீதிமன்றம் விமர்சனம் செய்துள்ளது. புலம்பெயர் தொழிலாளர்கள் நலனுக்காக, இதுவரை என்னென்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள் என்று மத்திய மாநில அரசுகள் விளக்க வேண்டும் என்று கூறி மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அளித்துள்ளது.