"நான் இருக்கிறேன்".. இடம்பெயர் தொழிலாளர்களுக்காக.. தெருவில் இறங்கிய ராகுல்.. அப்படியே ராஜீவ் போல!
தொழிலாளர்களுக்கு ராகுல்காந்தி நம்பிக்கை தந்து ஆறுதல் சொல்லி வருகிறார்
டெல்லி: தெருவில் இறங்கி விட்டார் ராகுல்.. பிளாட்பாரத்தில் உள்ள புலம் பெயர் தொழிலாளர்களின் கையை அழுத்தமாக பிடித்து "நான் இருக்கிறேன்" என்ற நம்பிக்கையை வலிய பதித்துள்ளார்.. அப்படியே ராஜீவ்வை பார்ப்பது போலவே இருக்கிறது!!
புலம் பெயர் தொழிலாளர்களுக்காக குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளர் ராகுல்காந்தி.. இதற்காக வீதியில் இறங்கிவிட்டார் ராகுல்... இது மறைந்த ராஜீவ் காந்தியின் ஸ்டைல்.. ஏழையின் குடிசை, தெருவீதி என்றெல்லாம் ராஜீவ் பார்க்க மாட்டார். யாராக இருந்தாலும் அள்ளி அரவணைப்பதும், ஆறுதல் சொல்வதும் அவரது இயல்பான குணம்!
ராஜீவ் காந்தி மட்டுமில்லை.. காந்தி குடும்பத்துக்கே இந்த பழக்கம் உள்ளது.. எளியவர்களுடனும், வறியவர்களுடனும் ஒன்றிணைவதும், அவர்களுடன் அளவளாவி மகிழ்வதும் இவர்களுக்கு பிடித்தமான ஒன்று... ரத்தத்தில் ஊறி திளைத்த ஒன்று!!
திடீரென பின்வாங்கிய சீனா.. மனம்மாறிய ஜிங்பிங்.. ஹு விசாரணைக்கு ஒத்துழைப்பு.. என்ன நடந்தது?
ஏழை, எளியவர்கள்
எத்தனையோ குடிசைகளில் ராஜீவ், ஏழைகள் சுட்டு தந்த சப்பாத்தியை அவர்களுடன் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட்டுள்ளார்.. ராகுல் ஏழை மக்களுடன் டீ குடிப்பதும், பிஸ்கட் சாப்பிடுவதும் வெகு இயல்பானது.. இதேதான் பிரியங்காவும்... தொழிலாளர்கள், ஏழைகளுக்கு பிரச்சனை என்றால் அங்கு பிரியங்கா ஆஜராவது சர்வசாதாரணமான ஒன்று.. ஆனால் இவர்கள் எல்லோருமே மிக முக்கியமான நேரத்தில்தான் ஏழை, தொழிலாளர்களுக்கு ஆதரவை தருகிறார்கள் என்பதே கவனிக்கத்தக்கது!!
டிராமா பாஸ்
தற்போது அந்த பாணியிலேயே ராகுல் தொழிலாளர்களுக்காக களமிறங்கியதை கண்டு சற்று மிரண்டுவிட்டது பாஜக என்றுதான் சொல்ல வேண்டும்.. "டிராமா பாஸ்" என்ற வார்த்தை உபயோகிக்கப்பட்டுள்ளது.. இது பாஜக - காங்கிரஸ் கட்சிகளின் தனிப்பட்ட விமர்சனம், அரசியல் என்றாலும் அதற்குள் நாம் போக வேண்டியதில்லை. இந்த விஷயத்தில் உற்று கவனித்து, பாராட்டப்பட வேண்டியது ராகுலின் அணுகுமுறையைதான்.
சோனியா காந்தி
முதல்முறை லாக்டவுன் போடப்பட்ட போதிருந்து இன்று வரை அதிகமாக பாதிக்கப்பட்டு வருவது புலம்பெயர் தொழிலாளர்கள்.. அவர்களின் நிலை கண்டு, அப்போதே சோனியா காந்தி கொந்தளித்தார். "தொழிலாளர்களின் நிலையை தன்னால் பார்க்க சகிக்கவில்லை, லாக்டவுன் என்பது சரியான நடவடிக்கைதான்.. ஆனால் சரியாக பிளான் செய்யப்படவில்லை" என்றார்.. இப்படி எதிர்க்கட்சிகள் எல்லோருமே புலம்பெயர் தொழிலாளர்கள் விஷயத்தை கையில் எடுக்கவும்தான், இடம் பெயர்ந்து செல்ல மத்திய அரசு ஒரு உத்தரவினை பிறப்பித்தது.
போக்குவரத்து வசதிகள்
உத்தரவு பிறப்பிக்கப்பட்டதே தவிர, அத்தொழிலாளர்களுக்கு சரியான போக்குவரத்து வசதிகள் செய்து தரப்படவில்லை என்று அடுத்த குற்றச்சாட்டு எழுந்தது.. இதனிடையே ரயில் விட போகிறார்கள் என்று கேள்விப்பட்டு, தேவையற்ற வதந்திகளால் திரண்டு போராடியவர்களும் ஏராளம்! ஏற்கனவே காசு, சாப்பாடு இல்லாமல் வெம்பி போன இவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது அடுத்த பிரச்சனையாக உருவாயிற்று!
பசி - பணம் இல்லை
3 தினங்களுக்கு முன்பு இவர்களுக்கான நலன்களை மத்திய அரசு அறிவித்ததும், இன்று பசியாக நடந்து போகிறவர்களால் அதை அனுபவிக்க முடியவில்லை.. 1500 கிமீ நடந்தாலும் பரவாயில்லை என்று மனம்வெறுத்து நடந்து கொண்டிருக்கும் தொழிலாளர்களை உடனடியாக மீட்க முடியவில்லை.. நட்ட நடு காட்டிலும், கல்லிலும், மேட்டிலும், தண்டவாளங்களிலும் நடந்து சோர்ந்து போய் கொண்டிருக்கிறார்கள்.
துன்பங்கள் - வலிகள்
அவர்களுக்கு இந்நேரம் தேவையெல்லாம், ஒட்டிய வயிறுகளுக்கு கொஞ்சம் சாப்பாடு.. எப்படியாவது உயிரை கையில் பிடித்து கொண்டு ஊருக்கு போய் சேர்ந்துவிட வேண்டும்.. 3 மாதமாக ரணமாகி கிடக்கும் மனசுக்கு ஆறுதல் வார்த்தைகள்.. அன்பு காட்டும் நல்லுள்ளங்கள்.. நாங்க இருக்கிறோம் என்ற நம்பிக்கை வரிகள்.. இவ்வளவுதான்.. இதைதான் ராகுல் செய்ய முயன்றுள்ளார்.. முயன்றும் வருகிறார்.
ராகுல்காந்தி
இவர்களின் பிரச்சனை 3 மாதமாக நீடித்து வரும் நிலையில், வலிகளை பகிர்வதும், ஆறுதல் சொல்வதும் தொழிலாளர்களுக்கு நிம்மதியை தந்துள்ளது.. ராகுல் தெருவில் உட்கார்ந்து மட்டும் பேசவில்லை.. ஒரு மணி நேரம் அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.. 10 காரில் சொந்த ஊர் அனுப்பி நடவடிக்கை எடுத்துள்ளார். நிதியுதவியும் செய்துள்ளார்.. இதனால் கலங்கிய கண்கள் கொஞ்சம் நிம்மதி அடைந்துள்ளனர்.
தொற்று பாதிப்பு
2 மாதங்களுக்கு முன்பிருந்தே மத்திய அரசுக்கு கொரோனாதடுப்பு குறித்த ஆலோசனைகளையும் தந்து வருகிறார்.. ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார்.. தொற்று இந்தியாவில் விஸ்வரூபம் எடுக்கும்முன்பே அதாவது பிப்ரவரி மாதமே அரசை அலர்ட் செய்திருந்தார் ராகுல்.. உரிய நடவடிக்கை எடுக்க தவறினால் நாடு பெரும் இன்னல்களை சந்திக்க நேரிடும் என்றும் கூறியிருந்தார்.
இனி "பப்பு" இல்லை
அன்று ராகுல் என்னவெல்லாம் சொன்னாரோ, அவை எல்லாமே தற்போது நடந்து வருகிறது.. ஆனால், இவ்வளவும் ராகுல் அலர்ட் செய்தாலும், அரசை எதையும் சொல்லி காட்டவில்லை.. குத்திக்காட்டவில்லை.. கிண்டல், கேலி செய்யவில்லை.. குறிப்பாக அரசு எடுத்துவரும் திட்டங்களை, செயல்பாடுகளை விமர்சிக்கவில்லை, குறைகூறவில்லை.. மாறாக, ராகுல் தெருவில் இறங்கிய ராகுல் தொழிலாளர்களுக்கு ஆறுதல் சொல்லி நிம்மதியை அள்ளி தந்துள்ளார்.. இனியும் ராகுலை "பப்பு" என்று யாரும் சொல்லிவிட முடியாது.. அடுத்த தலைவனாக உருவெடுத்து கொண்டிருக்கிறார் என்பதே உண்மை!!