லாக்டவுன் நீட்டிப்பா? கேள்விக்குறியாகும் சொந்த தேசத்து அகதிகளான வெளிமாநில தொழிலாளர் எதிர்காலம்
டெல்லி: கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக லாக்டவுன் காலத்தை மத்திய அரசு நீட்டித்தால் சொந்த தேசத்தில் பிற மாநிலங்களில் அகதிகளாக சிக்கி தவிக்கும் கூலி தொழிலாளர்களின் எதிர்காலம் பெரும் கேள்விக்குறியாகும் அபாயம் எழுந்துள்ளது.
Recommended Video
கொரோனா தொற்று நோயைக் கட்டுப்படுத்த நாட்டில் முதலில் சுய ஊரடங்கு அமலாக்கம் செய்யப்பட்டது. பின்னர் வேறுவழியே இல்லாமல் மத்திய அரசு 21 நாட்கள் லாக்டவுனை அறிவித்தது.
இந்தியாவில் இதுவரை லாக்டவுன் நடைமுறைப்படுத்தியது இல்லை. இதனால் தொடக்கத்தில் ஓரிரு நாட்கள் எதுவும் புரிபடாமல் இருந்தது. அடுத்தடுத்த நாட்கள்தான் லாக்டவுன் என்பதன் பின்விளைவுகளை ஒட்டுமொத்த தேசமே உணரத் தொடங்கியது.
நடுத்தெருவில் குடும்பங்கள்
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை தொழிலாளர்களாக பிற மாநிலங்களில் அகப்பட்டவர்கள் அடுத்த வேளைக்கு என்ன வழி என தெரியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். பல மாநிலங்களில் நல் உள்ளங்கள் உணவுக்கு உதவிக் கரம் நீட்டியபோதும் பிள்ளை குட்டிகளுடன் எத்தனை நாள் நடுவீதியில் குடித்தனம் நடத்துவது? என்ற கேள்விகளால் திணறடிக்கப்பட்டனர் தினக் கூலி தொழிலாளர்கள்.
ஒரே நேரத்தில் புறப்பட்ட தொழிலாளர்கள்
இதனால்தான் ஒரே நேரத்தில் பல லட்சக்கணக்கான கூலி தொழிலாளர்கள் டெல்லியை விட்டே புறப்பட்டனர். பல்லாயிரம் கிலோ மீட்டர் தூரம் நடைபயணம் மேற்கொண்டாலும் சொந்த ஊருக்கு திரும்பி விடுவது என கொதிக்கும் தார்சாலைகளில் மூட்டை முடிச்சுகளுடனான கொரோனா யுத்த அகதிகளால் வட இந்திய நெடுஞ்சாலைகள் நிரம்பி வழிந்தன.
பலியான தமிழர்கள்
தென்னகத்திலும் மட்டும் என்ன? மகாராஷ்டிராவில் இருந்தும் ஹைதராபாத்தில் இருந்தும் தமிழக நோக்கி நடையாய் நடந்து வந்து மாண்டவர்களும் உண்டு. பக்கத்து கேரளாவில் இருந்து மலைகாடுகளின் வழியே நடந்து வந்து காட்டுத் தீயில் சிக்கி கருகியவர்களும் உண்டு.. ரயில் பாதைகளின் தடத்திலேயே கால்நடையாய் கேரளாவில் இருந்து கோவையை வந்தடைந்த ஜீவன்களும் உண்டு..
ரத்தங்களின் வரலாறு
இந்த மண்ணின் ஒவ்வொரு மாநிலத்திலும் இப்படி ரத்தம் சொட்ட சொட்ட கால்தேய்ந்து கால்நடையாவேக பல நாட்கள் கொலை பட்டினியோடு சொந்த கிராமத்தை மிதித்த மானுடங்களின் வலியை யார் புரிவார்களோ? என்கிற நிலைதான் இருக்கிறது. இவர்கள் அல்லாமல் பணிபுரிந்த மாநிலங்களில் பரிதவித்த பல லட்சம் தொழிலாளர்களின் பசியாற்றிக் கொண்டிருக்கிறார்கள் பரந்த மனம் கொண்ட மனிதர்கள்.
லாக்டவுனை நீட்டித்தால் என்னவாகும்?
இந்நிலையில்தான் லாக்டவுன் நீட்டிக்கப்படலாம் என்கிற சூழ்நிலை உருவாகி உள்ளது. டெல்லியில் அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதில் இருந்தே, நிச்சயம் லாக்டவுன் காலம் நீட்டிக்கப்பட போகிறது என்பது உறுதியாகி உள்ளது. அப்படியானால் பிற மாநிலங்களில் அகதிகளைப் போல பிறரது கைகளை எதிர்பார்த்து வாழுகிற பல லட்சம் தொழிலாளர்கள் என்ன ஆவார்கள்? அவர்களும் இந்திய நெடுஞ்சாலைகளில் வரலாறு காணாத நீண்ட பயணத்துக்கு தெற்கும் வடக்குமாக, வடக்கும் கிழக்குமாக தயாராகத்தான் வேண்டுமா? என்பதே துயர்மிகு கேள்வி.