ரேஷன் அட்டை இல்லாவிட்டாலும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு இலவச உணவு பொருட்கள்.. நிர்மலா அறிவிப்பு
டெல்லி: புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அந்தந்த மாநிலங்களில் உள்ள ரேஷன் கடைகளில் இரு மாதங்களுக்கு விலையில்லா அரிசி அல்லது கோதுமை வழங்கப்படும். ரேஷன் அட்டை இல்லாதோருக்கும் இந்த பொருட்கள் வழங்கப்படும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
ரூ 20 லட்சம் கோடி மதிப்பிலான சிறப்பு பொருளாதார திட்டத்தின் கீழ் நேற்று சிறுகுறு தொழிலாளர்கள் உள்ளிட்டோருக்கு மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
இந்த நிலையில் பிரதமர் அறிமுகப்படுத்திய தன்னிறைவு இந்தியா திட்டத்தின் கீழ் இன்றைய தினம் இரண்டாம் கட்ட அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அவர் புலம்பெயர் தொழிலாளர்களுக்கான 3 திட்டங்களும் தெருவோர வியாபாரிகளுக்கான ஒரு திட்டமும் என மொத்தம் 9 புதிய அறிவிப்புகளை அவர் வெளியிட்டார்.
மிடில் கிளாஸ் மக்களுக்கு ஹேப்பி நியூஸ்.. வீட்டு வசதி திட்டம் அடுத்த வருடம் வரை நீட்டிப்பு- நிர்மலா
அக்கறை
அவர் கூறுகையில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீது எங்களுக்கு அக்கறை இருக்கிறது. அவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை இந்த அரசு பல வழிகளில் வழங்கி வருகிறது. மாநில பேரிடர் நிதியை பயன்படுத்தி புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கும் இடம் அமைக்கவும் அவர்களுக்கு உணவு, தண்ணீர் வழங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
தொழிலாளர்கள்
100 நாள் வேலை திட்டத்தில் ஊதியம் ரூ182-ல் இருந்து ரூ202 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டு மே மாதத்தை ஒப்பிடுகையில் 100 நாள் வேலை திட்டத்தில் 40-50% பேர் கூடுதலாக பதிவு செய்துள்ளனர். மே 13 ஆம் தேதி வரை 14.62 கோடி பேர் பயனடைந்துள்ளார்கள். பிற மாநிலங்களில் இருந்து சொந்த மாநிலம் திரும்பிய தொழிலாளர்களுக்கு 100 நாள் திட்டத்தில் வேலை வழங்கப்படும்.
8 கோடி பேர் பலன்
புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அடுத்த இரு மாதங்களுக்கு விலையில்லா அரிசி அல்லது கோதுமை வழங்கப்படும். இதற்காக ரூ 3500 கோடி செலவு செய்யப்படும். இதன் மூலம் 8 கோடி புலம்பெயர் தொழிலாளர்கள் பயனடைவார்கள்.
இலவசம்
ரேஷன் அட்டை உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அந்தந்த மாநிலங்களில் உள்ள ரேஷன் கடைகளில் மாதந்தோறும் 5 கிலோ அரிசி அல்லது 5 கிலோ கோதுமை, ஒரு கிலோ பருப்பு வழங்கப்பட்டு வருகிறது. இது ரேஷன் அட்டை இல்லாதோருக்கும் இருமாதங்களுக்கு இலவசமாக வழங்கப்படும்.
மகிழ்ச்சி
புலம்பெயர் தொழிலாளர்களுக்கு குறைந்த வாடகையில் வீடு வழங்கும் திட்டம் அமல்படுத்தப்படும். அது போல் நகர்ப்புற ஏழைகளுக்கும் வீடு வழங்கப்படும். இது குறித்த வழிகாட்டுதல்கள் விரைவில் அறிவிக்கப்படும் என பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். இதன் மூலம் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் மனங்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளார்.