தீவிரவாதத்திற்கு எதிரான கடும் நடவடிக்கைகளில் இருந்து பின்வாங்க போவதில்லை.. அமித் ஷா உறுதி
டெல்லி: மத்திய அரசு எடுத்து வரும் தீவிர நடவடிக்கைகள் காரணமாக ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், தீவிரவாதம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ச்சியாக தீவிரவாத சம்பவங்கள் அரங்கேறி வந்தன. இதனையடுத்து கடந்த ஓராண்டு காலமாக அம்மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமலில் உள்ளது.
ஏற்கனவே இரு முறை 6 மாத காலங்கள் அம்மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி நீடிக்கப்பட்ட நிலையில், தற்போது மூன்றாவது முறையாக குடியரசு தலைவர் ஆட்சியை நீடிக்க நாடாளுமன்ற ஒப்புதலை பெற வேண்டியது அவசியமாகியுள்ளது.
இதனையடுத்து ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் குடியரசு தலைவர் ஆட்சியை மேலும் 6 மாதம் நீடிக்கும் வகையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மக்களவையில் இன்று மசோதா ஒன்றை தாக்கல் செய்தார். மத்திய அமைச்சரான பின்னர் அமித் ஷா தாக்கல் செய்துள்ள முதல் மசோதா இதுவாகும்.
இந்த மசோதாவை தாக்கல் செய்து பேசிய அமித் ஷா, ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் முன்பை விட தற்போது சட்டம் - ஒழுங்கு நிலைமைய ஓரளவு மேம்பட்டுள்ளது. இதே நிலை நீடிக்கும்பட்சத்தில் அடுத்த 6 மாதங்களுக்குள், அம்மாநிலத்தில் சுமூகமாக தேர்தலை நடத்தி விட முடியும் என்று நம்பிக்கை வெளியிட்டார்.
அதுவரை காஷ்மீரில் குடியரசு தலைவர் ஆட்சி நீடிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதால் தான் தற்போது இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளதாக அமித் ஷா குறிப்பிட்டார். மோடி அரசு முற்றிலும் சகித்து கொள்ள முடியாத பயங்கரவாதத்தின் மீது தொடர்ச்சியாக கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் காரணமாக தீவிரவாதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியையும் தாக்கி பேசினார் அமித் ஷா. மற்ற மாநில மக்களுக்கும் காஷ்மீரின் பள்ளத்தாக்கு பகுதியில் வசிக்கும் மக்களுக்கும் இடையே, மிகப்பெரிய இடைவெளி உள்ளது. இதற்கு பல ஆண்டுகள் நாட்டை ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சியே காரணம் என்றார்.
காஷ்மீர் பள்ளத்தாக்கில் வசிக்கும் மக்களின் நலன் கருதி, முந்தைய காங்கிரஸ் அரசு செயல்படவில்லை. பாகிஸ்தான் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்த அரசு எடுத்த முடிவை பாராட்டி பேசிய அமித் ஷா, இந்தியாவின் தற்காப்புக்காகவே சர்ஜிக்கல் ஸ்டிரைக் மற்றும் வான்வழித் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன.
ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதம் பரவுவது பாகிஸ்தானால் தான். எனவே தீவிரவாதத்திற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுப்பதில் பின்வாங்க போவது இல்லை. தீவிரவாதத்திற்கு எதிரான சகிப்புத்தன்மை கொள்கை குறித்து பேசிய அமித் ஷா, இதற்கு உதாரணமாக பாகிஸ்தானுக்குள் நுழைந்து தீவிரவாதிகளையும், அவர்களது முகாம்களையும் அழித்துள்ளதை சுட்டிக்காட்டி பேசினார்.
நம் நாட்டை அழிக்க நினைக்கும் தீவிரவாதத்தின் வேர் எங்கெல்லாம் உள்ளதோ, அங்கே நாங்கள் நுழைந்து அதனை அழித்தொழிப்போம் என்றார்.