எல்லோருக்கும் குறைந்தபட்ச ஊதியம்.. இல்லையென்றால் ரூ.10 லட்சம் ஃபைன்.. நாடாளுமன்ற நிலைக்குழு அதிரடி!
இந்தியா முழுக்க அனைத்து பணியாளர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியம் எவ்வளவு கொடுக்க வேண்டும் என்று நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை ஒன்றை செய்ய உள்ளது.
டெல்லி: இந்தியா முழுக்க அனைத்து பணியாளர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியம் எவ்வளவு கொடுக்க வேண்டும் என்று நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை ஒன்றை செய்ய உள்ளது.
தற்போது இந்தியாவில் ஒவ்வொரு நிறுவனங்களிலும் குறைந்தபட்ச ஊதியம் வெவ்வேறாக வழங்கப்படுகிறது. சில இடங்களில் குறைந்தபட்ச ஊதியம் 20,000 ரூபாயும் சில இடங்களில் வெறும் 6000 ரூபாயும் அளிக்கப்படுகிறது. இந்த நிலையில் இதை முறைப்படுத்த நாடாளுமன்ற நிலைக்குழு முடிவெடுத்துள்ளது.
இதற்கான பரிந்துரையை நாடாளுமன்ற நிலைக்குழு இன்று மத்திய அரசிடம் சமர்பித்தது. அதன்படி எல்லா நிறுவனங்களும் முறையான குறைந்தபட்ச ஊதியத்தை ஊழியர்களுக்கு வழங்க வேண்டும்.
அரசு, தனியார், தொண்டு நிறுவனம், பதிவு செய்த நிறுவனம், பதிவு செய்யாத நிறுவனம், ஸ்டார் அப் என்று எந்த நிறுவனமாக இருந்தாலும் தனது ஊழியர்களுக்கு குறைந்தபட்ச சம்பளம் வழங்க வேண்டும். அதேபோல் ஊழியர்கள் 8 மணி நேரத்திற்கும் அதிகமாக எங்கும் வேலை பார்க்கக் கூடாது.
மேலும் அதிக அனுபவம் உள்ளவர்களுக்கு சம்பள உயர்வு அளிக்க வேண்டும். புதியவர்களுக்கும், அனுபவம் உள்ளவர்களுக்கும் ஒரே சம்பளம் வழங்க கூடாது. இதை முறையாக செய்யாத நிறுவனங்களுக்கு 10 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.
குறைந்தபட்ச ஊதியம் எவ்வளவு என்று மாநில அரசுகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை செய்து முடிவெடுக்கப்படும். அதன்பின் அந்த அறிக்கை நாடாளுமன்ற நிலைக்குழு மூலம் மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்படும். இந்த தொகை 5 வருடத்திற்கு ஒருமுறை திருத்தப்படும் என்றும் நாடாளுமன்ற நிலைக்குழு தெரிவித்துள்ளது.
இதனால் நாடு முழுக்க மொத்தம் 48 லட்சம் பணியாளர்கள் பயன் பெறுவார்கள் என்று கூறப்படுகிறது. இதில் 82.7 சதவிகிதம் பேர் ஒழுங்குபடுத்தப்படாத துறைகளில் வேலை பார்க்கும் பணியாளர்கள் ஆவர்.