இந்தியாவில் நடப்பாண்டு இறுதியில்... கொரோனா வைரஸ் மருந்து... மத்திய அமைச்சர் நம்பிக்கை!!
டெல்லி: கொரோனா வைரஸூக்கு எதிரான தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் அனைத்தும் சரியாக சென்றால் நடப்பாண்டின் இறுதியில் இந்தியாவில் தடுப்பு மருந்து கிடைத்துவிடும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பு மருந்து இந்தியாவிலும் தயாராகி வருகிறது. தற்போது இரண்டு மருந்துகள் பரிசோதிக்கப்பட்டு வருகின்றன. இதுதவிர நம்பிக்கை அளிக்கும் வகையில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கோவிஷீல்டு மருந்தும் இந்தியாவில் மனித ஆய்வுக்கு உட்படுத்தபட்டுள்ளது.
இதுகுறித்து சமீபத்தில் பேட்டி அளித்து இருந்த இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலின் இயக்குனர் ஜெனரல் டாக்டர் பல்ராம் பார்கவா அளித்திருந்த பேட்டியில், ''பாரத் பயோடெக்கின் தடுப்பு மருந்தும், சைடஸ் கேடிலாவின் மருந்தும் பரிசோதனை அடிப்படையில் ஆய்வில் உள்ளன. இவற்றில் சைடஸ் கேடிலா மருந்து இரண்டாவது கட்ட ஆய்வில் உள்ளது'' என்று தெரிவித்து இருந்தார்.
இவை தவிர ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம் தயாரித்த தடுப்பு மருந்துக்கு இந்தியாவில் கோவிஷீல்டு என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த மருந்தை இந்தியாவில் தயாரிக்க சீரம் இன்ஸ்ட்டிடியூட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பு மருந்தும் இந்தியாவிலும் மனித பரிசோதனைக்கு நடப்பு வாரத்தில் பரிசோதனைக்கு உட்படுத்தப்படலாம் என்று கூறப்படுகிறது. பிரிட்டனில் இந்த மருந்து மூன்றாம் கட்ட ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் நேரடியாக இண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 31 லட்சத்தை தாண்டியது- மேலும் 61,749 பேருக்கு தொற்று!
இதையடுத்து இந்தியில் ட்வீட் செய்திருக்கும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், ''அனைத்தும் சரியான பாதையில் சென்றால் நடப்பாண்டு இறுதியில் கொரோனா தடுப்பு மருந்து இந்தியாவில் கிடைக்கும்'' என்று பதிவிட்டுள்ளார்.
இத்துடன் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் நாடுகள் எந்தளவிற்கு உள்ளன. எந்தெந்த மருந்து எந்தக் கட்ட ஆய்வில் உள்ளன, எப்போது மக்களுக்கு கிடைக்கும் போன்ற விவரங்கள் அடங்கிய இணையதளத்தை மத்திய சுகாதாரத்துறை உருவாக்கி வருகிறது. இந்த இணையத்தின் வாயிலாக அனைத்து விவரங்களையும் விரைவில் அறிந்து கொள்ளலாம். இந்த இணையதளம் அனைத்து மொழிகளிலும் கிடைக்கும் என்று ஐசிஎம்ஆர் தொற்றுநோய் பிரிவு தலைவர் சமிரன் பாண்டா தெரிவித்துள்ளார். இந்த இணையதளம் அடுத்த வாரம் செயலுக்கு வரும் என்று பாண்டா தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் நேற்று மட்டும் 69,239 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டு இருந்தது. இத்துடன் இந்தியாவில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 30,44,940 ஆக அதிகரித்துள்ளது. 56,706 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்றைய கணக்கின்படி 24 மணி நேரத்தில் 912 பேர் உயிரிழந்துள்ளனர்.