இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு எதிராக பேசிவிட்டு பல்டியடித்த பியூஷ் கோயல்!
டெல்லி: கடந்த சில நாட்களுக்கு முன் நாட்டில் உள்ள இ காமர்ஸ் நிறுவனங்களை வர்த்தக துறை அமைச்சர் பியூஷ் கோயல் நிகழ்ச்சி ஒன்றில் கடுமையாக விமர்சித்துப் பேசியிருந்தார். ஆனால், ஒரே நாளில் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்ட அவர், இப்போது இ காமர்ஸ் நிறுவனங்களை பாராட்டிப் பேசியிருக்கிறார்.
இந்தியாவில் இ காமர்ஸ் நிறுவனங்கள் வேகமாக வளர்ந்து வருகிறது. நம்மில் பெரும்பாலானோர் இப்போது ஆன்லைனில் பொருட்களை வாங்க அதிகரித்துள்ளதே இதற்குக் காரணம்.

அதேநேரம் இந்த இ காமர்ஸ் நிறுவனங்கள் உள்ளூர் கடைகளை காலி செய்ய நஷ்டத்திற்கு தங்கள் பொருட்களை விற்பனை செய்வதாகவும் விமர்சனங்கள் உள்ளன.
விமர்சனம்: சமீபத்தில் மத்திய வர்த்தக துறை அமைச்சர் பியூஷ் கோயலும் இந்த இ காமர்ஸ் நிறுவனங்களை விமர்சித்துப் பேசியிருந்தார். இ காமர்ஸ் நிறுவனங்களின் விதிமீறல்கள் மற்றும் அவர்கள் பின்பற்றும் விலை நிர்ணயம் முறையை பியூஷ் கோயல் கடுமையான கருத்துகளைக் கூறியிருந்தார். உள்ளூர் கடைகளை காலி செய்ய ஆன்லைன் நிறுவனங்கள் மிகக் குறைந்த விலைக்குப் பொருட்களை விற்பதாக விமர்சனங்கள் உள்ளன.
அதையே தான் பியூஷ் கோயல் குறிப்பிட்டுப் பேசியிருந்தார். இது குறித்து அவர் கூறுகையில், "சிறு கடைகள் மற்றும் பெரிய இ-காமர்ஸ் நிறுவனங்கள் இடையே சமமான போட்டி தேவை என்பதே அரசின் நிலைப்பாடு. பெரிய இ காமர்ஸ் நிறுவனங்களுக்கு எதிராகச் சிறிய கடைகளுக்கும் நியாயமான வாய்ப்பு இருப்பதை நாங்கள் உறுதிப்படுத்த விரும்புகிறோம்" என்று கூறியிருந்தார்.
மறுப்பு: இதை அந்நிறுவன பிரதிநிதிகள் நிராகரித்தனர். இது தொடர்பாக அவர்கள் தரப்பு கூறுகையில், "ஒரு பொருளுக்கு நிர்ணயம் செய்யப்படும் விலை குறித்து அமைச்சர் பேசியிருந்தார். ஆனால், எங்கள் துறையில் விலையை நிர்ணயம் செய்வது நாங்கள் இல்லை. சம்பந்தப்பட்ட விற்பனையாளர்கள் (செல்லர்கள்) தான் விலையைத் தீர்மானிக்கிறார்கள்" என்றனர்.
பல்டி: இதற்கிடையே இப்போது ஒரே நாளில் பியூஷ் கோயல் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு இருக்கிறார். நாட்டின் இ காமர்ஸ் நிறுவனங்களைப் புகழ்ந்து பேசிய அவர், நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் இந்த காமர்ஸ் நிறுவனங்களின் பங்கு முக்கியமானது என்று பாராட்டிப் பேசியிருக்கிறார். அதேநேரம் துறை சார்ந்த வல்லுநர்களின் கருத்து வேறாக இருக்கிறது. இ-காமர்ஸ் நிறுவனங்களைச் சட்டத்திற்குப் புறம்பாகச் செயல்படுவதைத் தடை செய்யவும் அவர்களைக் கண்காணிக்கவும் ஒழுங்குமுறை ஆணையம் தேவை என்று என்றே துறை சார்ந்த வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
அவர்கள் கூறுகையில், "விலை நிர்ணயம் செய்வது அவர்கள் உரிமை தான். ஆனால், சில விஷயங்களை நாம் கண்காணிக்க வேண்டும். குறிப்பிட்ட தொகைக்குக் கீழ் டிஸ்கவுண்டு தரக் கூடாது உள்ளிட்ட சில விதிமுறைகள் இருக்க வேண்டும். ஏனென்றால் சில சமயம் உள்ளூர் கடைகளை காலி செய்ய அதிக டிஸ்கவுண்டை இந்த நிறுவனங்கள் வழங்குகின்றன. அதைத் தடுக்கவே இந்த விதிமுறைகள் தேவைப்படுகின்றன.
வல்லுநர்கள் கருத்து: அதேநேரம் எல்லா இ-காமர்ஸ் நிறுவனங்களும் இதைச் செய்வதில்லை. மிகப் பெரிய இ-காமர்ஸ் நிறுவனங்கள் மட்டுமே இதுபோல செய்கின்றன. அவர்கள் தான் அதிகமான தள்ளுபடிகளை வழங்குகிறார்கள். கடைகள் மட்டுமின்றி மற்ற இ காமர்ஸ் நிறுவனங்களாலேயே கூட அவர்களுடன் போட்டிப் போட முடிவதில்லை" என்றார்.
மேலும், பிஸ்னஸை பொறுத்தவரை பி2பி மற்றும் பி2சி என்று இரண்டு வகை இருக்கிறது. பி2சி என்றால் நுகர்வோருக்கு விற்பது. அதேநேரம் பி2பி என்றால் மற்ற நிறுவனங்களுக்கு விற்பதாகும். சில இ காமர்ஸ் நிறுவனங்கள் பி2பி லைசென்ஸ் வைத்துக் கொண்டு பி2சி பிஸ்னஸ் செய்து விதிமீறலில் ஈடுபடுவதாக பியூஷ் கோயல் குற்றஞ்சாட்டியிருந்தார். இருப்பினும், இதை துறை சார்ந்த வல்லுநர்களே மறுக்கிறார்கள்.
இது குறித்து அவர்கள் கூறுகையில், "நமது நாட்டில் பெரும்பாலான இ-காமர்ஸ் நிறுவனங்கள் பி2சி முறையில் தான் செயல்படுகின்றன. இதில் அமைச்சர் என்ன சொல்ல வருகிறார் என்பது புரியவில்லை. அவர் சற்று மிகைப்படுத்திச் சொல்வது போல இருக்கிறது" என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications