பிரதமர் மோடியை தொடர்ந்து... வரிசைகட்டி தடுப்பூசி எடுத்துக்கொள்ளும் மத்திய அமைச்சர்கள்
டெல்லி: கொரோனா தடுப்பூசியின் இரண்டாம்கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங் மற்றும் ரவிசங்கர் பிரசாத் கொரோனா தடுப்பூசியை எடுத்துக்கொண்டனர்.
கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளின் இரண்டாம் கட்டம் மார்ச் 1ஆம் தேதி தொடங்கப்பட்டது. 60 வயதைக் கடந்தவர்களுக்கும் 45 வயதைக் கடந்து உடல்நிலை பாதிப்பு உள்ளவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல் நாள் காலையிலேயே பிரதமர் மோடி எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசியை எடுத்துக்கொண்டார். அதேபோல உள் துறை அமைச்சர் அமித் ஷாவும் முதல் நாள் இரவு டெல்லியுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் தடுப்பூசி எடுத்துக்கொண்டார்.
இந்நிலையில், இன்று மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங் மற்றும் ரவிசங்கர் பிரசாத் ஆகியோர் கொரோனா தடுப்பூசியை எடுத்துக்கொண்டனர். பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் டெல்லியுள்ள ராணுவ மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை எடுத்துக்கொண்டார். அதேபோல மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பாட்னாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டார்.
இரண்டாம் கட்ட தடுப்பூசி செலுத்தும் பணிகளில் 60 வயதைக் கடந்தவர்கள், 45 வயதைக் கடந்த உடல்நிலை பாதிப்பு உள்ளவர்கள் என மொத்தம் 2,08,791 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.