ராகுல் காந்தியின் பேச்சை வைத்து பாகிஸ்தான் செய்த காரியம்.. பாஜக கடும் கண்டனம்
Recommended Video
டெல்லி: காஷ்மீர் விவகாரத்தில் ராகுல் காந்தி பொய் கருத்து கூறியிருப்பதாகவும், இதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் பாஜக வலியுறுத்தி உள்ளது.
காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசின் முடிவை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்து இருந்தார்
இதனிடையே பாகிஸ்தான் மனித உரிமைதுறை அமைச்சர் ஷிரின் மசாரி, ஐ.நா. சபைக்கு எழுதிய கடிதத்தில் ராகுல் காந்தியே காஷ்மீரில் மக்கள் செத்து வருவதாக கூறியிருக்கிறார் என குறிப்பிட்டு இருந்தார்.
நிலைப்பாட்டை மாற்றிய ராகுல்
இதனால் அதிர்ச்சி அடைந்த ராகுல் காந்தி திடீரென தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டார். பல பிரச்சனைகளில் மத்திய அரசுடன் நான் உடன்படவில்லை. ஆனால் நான் ஒரு விஷயத்தை தெளிவுபடுத்துகிறேன். காஷ்மீர் பிரச்சனை. இந்தியாவின் உள்விவகாரம். அதில் பாகிஸ்தானோ அல்லது வேறு நாடோ தலையிட உரிமை இல்லை.
பாகிஸ்தானே காரணம்
காஷ்மீரில் நடக்கும் வன்முறைகளுக்கு பாகிஸ்தான் தான் ஆக்கமும் ஊக்கமும் அளித்து வருகிறது. உலகத்தில் தீவிரவாதத்துக்கு முதன்மை ஆதரவாளராக பாகிஸ்தான் தான் இருக்கிறது என்று கூறினார்.
ராகுல் மன்னிப்பு கேட்கணும்
இதையடுத்து காஷ்மீர் விவகாரத்தில் ராகுல் காந்தி பொய் கருத்து கூறியிருப்பதாவும், இதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் பாஜக வலியுறுத்தி உள்ளது. மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறுகையில், "காஷ்மீரில் மக்கள் செத்துக்கொண்டிருப்பதாக தகவல் வருகிறது என ராகுல் காந்தி கூறியுள்ளார். அவரது கருத்து தவறு. பொய்யான கருத்துக்களை சொல்லி, பாகிஸ்தான் கைகளில் விளையாட்டு பொம்மையாகிவிட்டார் ராகுல் காந்தி. இதற்காக ராகுல் காந்தி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.
வாக்கு வங்கி அரசியல்
காஷ்மீரில் எந்த வன்முறையும் இதுவரை நடக்கவில்லை. வாக்கு வங்கிக்காக ராகுல் அரசியல் செய்கிறார். காஷ்மீர் இந்தியாவின் உள்விவகாரம் என அவர் வாயாலேயே சொல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்" இவ்வாறு அவர் கூறினார்.
பிரிவினையில் நெருப்பு
இதனிடையே மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி கூறுகையில், "ராகுல் காந்தியின் கருத்தை பாகிஸ்தான் பயன்படுத்தி உள்ளது. பாகிஸ்தான் ராகுலின் ஆதரவை பெறுவது இது முதல்முறை அல்ல. இந்தியாவின் மதிப்பை குறைந்து மதிப்பிடுகிற எதிரி நாட்டால் விரும்பப்படும் தலைவராக ராகுல் இருப்பது துரதிருஷ்டவசமானது. ராகுல் காந்தி பிரிவினையில் நெருப்பு வைக்காமல் இருந்தாலோ போதும். அங்கு வாழும் மக்கள் வளர்ச்சியை விரும்புகிறார்கள்" இவ்வாறு கூறினார்.