டெல்லியில் பரபரப்பு.... இஸ்ரேல் தூதரகம் அருகே குண்டுவெடிப்பு... ஒருவர் காயம்... கார்கள் சேதம்!
டெல்லி: டெல்லியில் சாணக்யபுரி பகுதியில் உள்ள இஸ்ரேல் நாட்டின் தூதரகம் அருகே குண்டு வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த குண்டுவெடிப்பில் ஒருவர் காயம் அடைந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் அங்கு இருந்த 4 கார்கள் சேதம் அடைந்தன. தலைநகர் டெல்லியில் சாணக்யபுரி பகுதியில் இஸ்ரேல் நாட்டின் தூதரகம் அமைந்துள்ளது. இன்று மாலை இஸ்ரேல் நாட்டின் தூதரகம் அருகே திடீரென குண்டு வெடித்தது. தூதரகத்தின் அருகே 40 முதல் 50 மீட்டர் தொலைவிலேயே இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதனால் அந்த பகுதி முழுவதும் பரபரப்பானது.
இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். முதற்கட்ட விசாரணையில் இஸ்ரேல் நாட்டின் தூதரகம் அருகே வெடித்தது குறைந்த சக்தி கொண்ட குண்டு என்பது தெரியவந்தது.இந்த குண்டு வெடிப்பில் சிக்கி ஒருவர் காயம் அடைந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த குண்டு வெடிப்பில் சிக்கி 4 கார்கள் சேதம் அடைந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
டெல்லியில் நாடளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ளது. மேலும் விவசாயிகளின் போராட்டமும் நடந்து வருகிறது. இந்த நிலையில் விஐபி பகுதியில் டெல்லியில் குண்டு வெடித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உளள்து. குண்டு வெடிப்பு நடந்த இடத்தில் போலீசார் தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகின்றனர்.