கெஜ்ரிவால் நேர்மையா இருக்கார்.. ஆம் ஆத்மியில் இணைந்த மிஸ் இந்தியா.. டெல்லியில் அதிரடி!
டெல்லி : முன்னாள் மிஸ் இந்தியாவான டெல்லியை சேர்ந்த மான்சி சேகல், இன்று ஆம்ஆத்மி கட்சியில் இணைந்துள்ளார். ஆம் ஆத்மி கட்சியின் டெல்லி மண்டல பிரிவின் தலைவர் ராகவ் சதா முன்னிலையில் மான்சி, அக்கட்சியில் இணைந்துள்ளார்.
ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தது பற்றி மான்சி கூறுகையில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் நேர்மையான ஆட்சி என்னை மிகவும் ஈர்த்தது. எல்எல்ஏ ராகவ் சதாவின் கடின உழைப்பும் பிடிக்கும். இதனால் ஆம் ஆத்மி கட்சியில் சேர முடிவு செய்தேன்.
தூய்மையான அரசியலின் மூலம் நாம் வாழும் உலகின் குறிப்பிடப்படும் படியான மாற்றத்தை கொண்டு வர முடியும் என நான் நம்புகிறேன் என்றார். மேலும் இளைஞர்களும், பெண்களும் அதிக அளவில் அரசியலுக்கு வர வேண்டும், ஆம் ஆத்மியில் இணைய வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.
மான்சி, தங்கள் கட்சியில் இணைந்தது பற்றி தெரிவித்த எம்எல்ஏ ராகவ் சதா, ஆம் ஆத்மி கட்சியும், அரவிந்த் கெஜ்ரிவாலும் இப்போது வரை இளைஞர்களுக்கு அரசியலுக்கு வர நம்பிக்கை அளித்து வருகின்றனர்.
ஆம் ஆத்மி குடும்பம் ஒவ்வொரு நாளும் பெரிதாக வளர்ந்து வருகிறது. ஆம் ஆத்மி குடும்பத்தில் இணைந்துள்ள மான்சியை வரவேற்கிறேன் என்றார். மேடை பேச்சாளரான மான்சி, இன்ஜினியர்கள் மற்றும் தொழில் முனைவோருக்கு பயிற்சியும் அளித்து வருகிறார். இவர் 2019 ல் மிஸ் இந்தியா பட்டம் வென்றவர்.