மிஷன் சக்தி சோதனை.. விண்ணில் சிதறிய கழிவுகள் பெரும்பாலும் அழிந்து விட்டதாக டி.ஆர்.டி.ஓ தகவல்
டெல்லி: விண்ணில் சுற்றும் செயற்கைக்கோள்களை தாக்கியழிக்கும் மிஷன் சக்தி சோதனையின் போது, விண்ணில் சிதறிய துண்டுகளில் பெரும்பாலானவை அழிந்து விட்டதாக டிஆர்டிஓ தகவல் தெரிவித்துள்ளது.
விண்ணில் சுற்றும் செயற்கைக்கோள்கள் மீது தாக்குதல் நடத்தி அழிக்கும் ஏவுகணை சோதனையை கடந்த மார்ச் மாதம் இந்தியா நடத்தியது. இந்த சோதனைக்கு மிஷன் சக்தி என்று பெயரிடப்பட்டது.
இந்த சோதனையின் போது ஒடிசா தீவில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை, 300 கிமீ உயரத்தில் சுற்றிக் கொண்டிருந்த செயற்கைக்கோளை துல்லியமாக தாக்கி அழித்தது. இந்த சாதனையின் மூலம் அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்தது.
ஆனால் சோதனையின் போது வெடித்து சிதறிய செயற்கைகோள் 400 துண்டுகளாக உடைந்து விண்வெளியில் மிதப்பதாக நாசா கூறியது. அவற்றில் சில துண்டுகள் சர்வதேச விண்வெளி நிலையத்தின் வட்ட பாதையில் மிதக்கிறது. இது மிகவும் ஆபத்தானது என கவலை தெரிவித்தது.
ஆனால் புவியின் கீழ் சுற்றுவட்ட பாதையில் இந்த தாக்குதல் நடந்ததால், செயற்கைக்கோள் சிதறல்கள் விரைவில் பூமிக்குள் நுழைந்து, எரிந்து கடலில் விழுந்துவிடும் என இந்தியா கூறியது. இந்நிலையில் டிஆர்டிஓ தலைவர் சதீஷ் ரெட்டியிடம் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
மறந்துவிடாதீர்... தனியார் பள்ளிகளில் இலவச கல்வி.. மே 18 ஆம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள்
அப்போது பேசிய அவர், கடந்த மாதம் தாம் இன்னும் சில வாரங்களில் விண்ணில் மிதக்கும் துண்டுகள் அழிந்து விடும் என கூறியிருந்தேன். நான் தெரிவித்தபடியே செயற்கைக்கோள் அழிப்பு சோதனையால், விண்ணில் சிதறிய துண்டுகளில் பெரும்பாலானவை அழிந்து விட்டன. எஞ்சிய துண்டுகளும் இன்னும்சில வாரத்தில் அழிந்துவிடும் என கூறினார்
முழுவதுமாக அந்த துகள்கள் எவ்வளவு நாட்களில் அழியும் என்பதை துல்லியமாக கணக்கிடுவது சிரமம் அந்த எஞ்சிய துண்டுகளால் ஆபத்து ஏதும் நேராது என குறிப்பிட்டார்.