விண்வெளித்துறையில் இந்தியா மாபெரும் சாதனை.. அது என்ன மிஷன் சக்தி? ஏன் நாட்டுக்கு முக்கியம்?
Recommended Video
டெல்லி: குறைந்த புவி சுற்றுப் பாதை வகையை சேர்ந்த செயற்கைக்கோளை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளதாக, பிரதமர் நரேந்திர மோடி இன்று அறிவித்தார்.
அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுக்கு அடுத்தபடியாக, இதுபோன்ற ஒரு சோதனையை வெற்றிகரமாக செய்து முடித்து, விண்வெளித்துறையின் எலைட் க்ளப்பில் இந்தியா இணைந்துள்ளது.
இது எந்த வகையில் முக்கியத்துவமான அம்சம் என்பது பற்றி பார்க்கலாம்.
விண்வெளியில் செயற்கைக்கோளை சுட்டு வீழ்த்தி சாதித்த இந்தியா.. மோடி பரபர அறிவிப்பு
செயற்கைக்கோள்
குறைந்த புவி சுற்றுப் பாதை செயற்கைக்கோள், (low Earth orbit-LEO) என்பது புவி மட்டத்திலிருந்து அதிகபட்சமாக சுமார் 2000 கிமீ உயரத்தில் சுற்றிவரக்கூடியதாகும். இதுபோன்ற செயற்கைக்கோள்கள், தொலைதொடர்புத்துறை, இணையதள சேவைகளுக்காக பயன்படுகின்றன. இமெயில், வீடியோ கான்பரன்ஸ் போன்றவற்றுக்கு இவை சிறப்பாக உதவுகிறது. மிக அதி வேகத்தில் இந்த வகை செயற்கைக்கோள்கள் சுற்றி வருபவை.
பல நாடுகள்
பல்வேறு நாட்டு அரசுகள் மற்றும் தனியார் நிறுவனங்களால், இதுபோன்ற சுற்றுவட்டப் பாதையில் 4000 செயற்கைக்கோள்கள் சுற்றி வந்து கொண்டுள்ளன. இந்த செயற்கைக்கோள்களில் ஒன்றைத்தான், அதுவும் இந்திய செயற்கைக்கோளைத்தான் இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. பூமியின் சுற்று வட்டப் பாதைக்குள், இந்த செயற்கைக்கோள் விழும்போது அது முழுமையாக எரிபட்ட நிலைக்கு வந்திருக்கும்.
300 கி.மீ உயரம்
சீனா 700 கிமீ தொலைவில் பறந்த செயற்கைக்கோளை சுட்டு வீழ்த்தியுள்ளது. இருப்பினும், அதன் துகள்கள் பூமிக்கு வரவில்லை. காரணம், அந்த உயரத்தில் புவி ஈர்ப்பு விசை கிடையாது என்பதால், விண்வெளியிலேயே அவை மிதந்து வருகின்றன. இந்தியா 300 கி.மீ உயரத்தில் பறந்த செயற்கைக்கோளை சுட்டு வீழ்த்தியுள்ளதால், அது பூமியின் சுற்றுவட்ட எல்லைக்குள்தான் வந்திருக்கும். ஆனால், காற்றிலேயே எரிக்கப்பட்டிருக்கும்.
இந்தியா அபாரம்
விண்வெளியில் உள்ள பிற நாட்டு விண்கலங்களை தாக்கி அழிப்பதுதான், வருங்காலத்தில் உலக நாடுகள் நடுவேயான போர் யுக்தியாக இருக்கப்போகிறது. செயற்கைக்கோள்கள் மூலம், நமது நாட்டை பிற நாடுகள் கண்காணிப்பதை தடுக்க இதுதான் உதவும். பிற நாடுகள் செயற்கைக்கோள் மூலமாக செய்துகொள்ளும் தொலைதொடர்புகளை முறியடிக்கவும், இந்த தாக்குதல் யுக்தி பலன் கொடுக்கும்.
தாக்குதலுக்கு புது யுக்தி
இதுவரை இந்தியா தனது விண்வெளியை அமைதிக்காக மட்டுமே பயன்படுத்தும் என கூறி வந்தது. அணுகுண்டு சோதனையை கூட அமைதியை நிலைநாட்டவே மேற்கொண்டோம். ஆனால், இப்போது, காலத்தின் தேவை கருதி, விண்வெளியை ராணுவ பயன்பாட்டுக்கு நகர்த்திக் கொண்டு சென்றுள்ளோம். ஏற்கனவே உளவு பார்ப்பதற்காக நாம் செயற்கைக்கோள்களை ஏவியிருந்தாலும், தாக்குதலுக்காக வான்வெளியை பயன்படுத்திக்கொள்ளும் சோதனையில் வெற்றி பெற்றது இதுதான் முதல் முறை. அந்த வகையில் மிஷன் சக்தி, இந்திய வரலாற்றில் ஒரு மாபெரும் மைல் கல்.