பிரதமர் போட்டோவா.. உஷார்.. 5 லட்சம் அபராதம், 6 மாதம் ஜெயில் தண்டனைக்கு வாய்ப்பு
டெல்லி: வியாபார நோக்கத்திற்காக, பிரதமர் அல்லது ஜனாதிபதியின் புகைப்படத்தை முறையற்ற அல்லது அங்கீகரிக்கப்படாத முறையில் பயன்படுத்தினால் ரூ .1 லட்சம் அபராதம் விதிக்கப்படும், மீண்டும் அதே தவறை செய்தால், ரூ .5 லட்சம் அபராதம் மற்றும் ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
சமீபத்தில், சில தனியார் நிறுவனங்கள் பிரதமர் மோடியின் புகைப்படத்தை தங்களது விளம்பரங்களில் பயன்படுத்தின. இதற்காக அந்த நிறுவனங்கள் மத்திய அரசிடம் மன்னிப்பு கேட்டு இருந்தன. இந்த விவகாரங்களை தடுப்பதற்காக, சின்னங்கள் மற்றும் பெயர்களை முறையற்ற வகையில் பயன்படுத்துதலை தடுக்கும் சட்டத்தில் நுகர்வோர் விவகார அமைச்சகம் திருத்தம் கொண்டு வரப்போகிறது.
இதன்படி, குடியரசு தலைவர், பிரதமர் புகைப்படங்கள், தேசிய கொடி, மகாத்மா காந்தி, அசோக சக்கரம், நாடாளுமன்றம் தர்ம சக்கரம், சுப்ரீம் கோர்ட்டு, ஹைகோர்ட்டு உள்ளிட்டவற்றின் சின்னம் மற்றும் பெயர்கள் வர்த்தகம் மற்றும் விளம்பரங்களுக்கு தவறாகவும், அனுமதியின்றி பயன்படுத்தினால் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும். அதே தவறை மீண்டும் செய்தால் ரூ.5 லட்சம் அபராதம் மற்றும் 6 மாதம் வரை ஜெயில் தண்டனை விதிக்கப்படும்.
இந்த புதிய சட்ட திருத்தம் விரைவில் கொண்டுவரப்படும். ஏனெனில் இப்போதுள்ள சட்டத்தின்படி, இவ்வாறான தவறுகளுக்கு அதிகபட்சம் ரூ.500தான் அபராதமாக விதிக்க முடியும். போக்குவரத்து விதிமீறலே பல மடங்கு அபராதத்திற்கு உள்ளாகியுள்ள இந்த சூழலில், இந்த அபராத தொகை மிக மிக குறைவாகும். எனவே, அரசு புதிய திட்டத்தோடு களமிறங்கியுள்ளது.
2016 செப்டம்பர் மாதம், ரிலையன்ஸ் ஜியோ தனது 4 ஜி சேவையை அரசின், டிஜிட்டல் இந்தியா திட்டத்திற்கு அர்ப்பணிப்பதாக கூறி, பிரதமர் மோடியின் புகைப்படத்தோடு, அனைத்து முன்னணி செய்தித்தாள்களிலும் விளம்பரங்களை வழங்கியிருந்தது.
இதேபோல், நவம்பர் 9 ஆம் தேதி, Paytm நிறுவனம், பிரதமரின் பணமதிப்பிழப்பு முடிவை வரவேற்பதாக கூறி மோடி புகைப்படத்துடன் விளம்பரம் செய்தது. அதன் டிஜிட்டல் வாலட் சேவையைப் பயன்படுத்தத் தொடங்குமாறு மக்களை வலியுறுத்தியது அந்த விளம்பரம். இதனால் கோபமடைந்த அரசு இரு நிறுவனங்களிடமும் விளக்கம் கேட்டது. தவறை ஒப்புக்கொண்டு, இரு நிறுவனங்களும், இனிமேல் இப்படி செய்ய மாட்டோம் என, கூறி, நிபந்தனையற்ற மன்னிப்பு கடிதங்களை கொடுத்துள்ளன.