என் மீதான பாலியல் புகார்கள் பொய்யானது, பதவி விலக மாட்டேன்: மத்திய அமைச்சர் அக்பர்
டெல்லி: தன் மீது சுமத்தப்பட்ட பாலியல் புகார்கள் பொய்யானது என்று கூறி மத்திய அமைச்சர் எம்.ஜே. அக்பர் தனது பதவியை ராஜினாமா செய்ய மறுத்துள்ளார்.
மத்திய அமைச்சர் எம்.ஜே. அக்பர் தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 11 பெண்கள் புகார் தெரிவித்துள்ளனர். இந்த பிரச்சனை தொடர்பாக அக்பர் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தெரிவித்தன.
இந்நிலையில் அக்பர் தனது ராஜினாமா கடிதத்ததை பிரதமர் மோடிக்கு அனுப்பி வைத்துவிட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய அக்பர் பாலியல் புகார்கள் குறித்து கூறியிருப்பதாவது,
என் மீது சுமத்தப்பட்ட பாலியல் புகார்கள் பொய்யானவை, ஜோடிக்கப்பட்டவை. புகார்கள் எழுந்தபோது நான் வெளிநாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்ததால் இது குறித்து உடனே பதில் அளிக்க முடியவில்லை.
ஆதாரம் இல்லாமல் புகார் தெரிவிப்பது அதிகரித்துள்ளது. எதுவாக இருந்தாலும் சரி, தற்போது நான் திரும்பி வந்துவிட்டேன். இந்த ஆதாரமற்ற புகார்கள் குறித்து என் வழக்கறிஞர்கள் பார்த்துக் கொள்வார்கள்.
இந்த போலி புகார்களால் என் பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. பொது தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் இந்த புயல் ஏன் கிளம்பியுள்ளது என்று வியக்கிறேன் என்கிறார் அக்பர்.
[ பெட்ரோல் விலையில் மாற்றம் இல்லை, டீசல் விலை உயர்வு ]
அமைச்சாராவதற்கு முன்பு அக்பர் பல்வேறு பத்திரிகைகளில் ஆசிரியராக இருந்தார். அப்போது தான் அவர் தங்களுக்கு பாலியல் புகார் அளித்ததாக 11 பெண்கள் புகார் தெரிவித்துள்ளனர். அவர்கள் புகார் தெரிவித்தபோது அவர் நைஜீரியாவில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்ககது.