கிராமப்புறங்களின் உயிர்நாடி... 100 நாள் வேலைக்கு அதிகரிக்கும் மவுசு... புள்ளி விபரங்களை பாருங்க!
டெல்லி: கொரோனானாவில் இருந்து மீண்டு நாடு இயல்பு நிலைக்கு திரும்பி ஆறு மாதங்கள் ஆன போதிலும் 100 நாள் வேலைத் திட்டத்திற்கான தேவை நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
ஏப்ரல் 2020 முதல் இந்த ஆண்டு பிப்ரவரி 17-ம் தேதி வரை 7.17 கோடி குடும்பங்கள் (10.51 கோடி தனிநபர்கள்) 100 நாள் வேலை திட்டத்தில் வேலை பெற்றுள்ளது.
தமிழ்நாடு, மேற்கு வங்கம், ராஜஸ்தான், உத்தரபிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் இருந்துதான் 100 நாள் வேலைத் திட்டத்திற்கு அதிக தேவை இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
முடங்கிய பொருளாதாரம்
ஒரு ஆண்டை கடந்த பின்பும் இந்தியாவில் இருந்து வெளியேற கொரோனா அடம்பிடித்து வருகிறது. கொரோனாவால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் சுமார் ஏழு, எட்டு மாதங்களுக்கு ஊரடங்கால் மக்கள் பட்ட பாட்டை எளிதில் கூறி விட முடியாது. தொழில் துறை முடக்கத்தால் பலர் வேலை இழந்தால் நாட்டின் பொருளாதாரம் அடியோடு முடங்கியது.அதன் பிறகு ஊரடங்கு தளர்வு வந்தபோதிலும் இன்னும் பொருளாதாரம் சரியாக மீள முடியாத நிலையில்தான் உள்ளது.
கைகொடுத்த 100 நாள் வேலைத் திட்டம்
நாட்டின் முதுகெலும்பான கிராமப்புறங்களில் பலர் வேலையிழந்து தவித்து வந்தனர். அப்போது பலருக்கு கை கொடுத்தது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம்(எம்.என்.ஆர்.இ.ஜி.எஸ்) ஆகும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் அல்லது 100 நாள் வேலைத் திட்டம் என்பது, நாட்டின் ஏழை மக்களுக்கு ஆண்டுக்குக் குறைந்தது 100 நாட்கள் வேலை வழங்கும் உத்தரவாதத்தை வழங்குகிறது.
தேவை அதிகரிப்பு
இத்திட்டத்தின் கீழ் பொது வேலை செய்ய விருப்பமுள்ள கிராமப்புற வயது வந்தவர்களுக்கு, அரசின் குறைந்த ஊதியத்துடன் ஒரு நிதியாண்டில் 100 நாட்களுக்குக் கட்டாய சிறப்புத்திறன் இல்லாத உடலுழைப்பு சார்ந்த வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது.இந்த நிலையில் நாடு இயல்பு நிலைக்கு திரும்பி ஆறு மாதங்கள் ஆன போதிலும் 100 நாள் வேலைத் திட்டத்திற்கான தேவை நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
40 லட்சம் குடும்பங்கள்
ஒவ்வொரு மாதமும் கிட்டத்தட்ட இரண்டு கோடி அல்லது அதற்கு மேற்பட்ட குடும்பங்கள் கிராமப்புற வேலை உத்தரவாதத் திட்டத்தைப் பெற்று வருகின்றன. நடப்பு நிதியாண்டில் இன்று வரை சுமார் 40 லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் முழு 100 நாள் வேலைவாய்ப்பை பெற்றுள்ளன. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் கொரோனா உச்சத்தில் இருந்தபோது அந்த மாதங்களில் எம்.என்.ஆர்.இ.ஜி.எஸ் திட்டத்தில் வேலை பெற்ற குடும்பங்களின் எண்ணிக்கை, கடந்த 2 மாதங்களில் அதாவது டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் அதே எண்ணிக்கையில்தான் உள்ளது.
தொடர்ந்து அதிகரிப்பு
மொத்தத்தில் ஏப்ரல் 2020 முதல் இந்த ஆண்டு பிப்ரவரி 17-ம் தேதி வரை 7.17 கோடி குடும்பங்கள் (10.51 கோடி தனிநபர்கள்) எம்.என்.ஆர்.இ.ஜி.எஸ் திட்டத்தில் வேலை பெற்றுள்ளது. கடந்த ஜூன் 2020-ல், 3.89 கோடி குடும்பங்கள் எம்.என்.ஆர்.இ.ஜி.எஸ்-ல் பதிவு செய்தன. இது 2019 ஜூன் மாதத்தை விட 80% அதிகமானது . ஜூலை 2020-ல் எண்ணிக்கை 2.75 கோடியாக இருந்தது. ஜூலை 2019 ஐ விட இது 83% அதிகமாகும்.ஆகஸ்ட், செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில், எம்.என்.ஆர்.இ.ஜி.எஸ்ஸைப் பெற்ற குடும்பங்களின் எண்ணிக்கை இரண்டு கோடியாக இருந்தது.
தமிழகத்தின் தேவை
நவம்பரில் இந்த எண்ணிக்கை(1.84 கோடி) வீழ்ச்சியடைந்த போதிலும், 2019 நவம்பரில் எம்.என்.ஆர்.இ.ஜி.எஸ்ஸில் கையெழுத்திட்டவர்களை விட 47% அதிகமாகும். கடந்த டிசம்பர் 2020 மற்றும் ஜனவரி 2021-ல் இந்த எண்ணிக்கை மீண்டும் 2.08 கோடியாக (46.8%) உயர்ந்துள்ளது. தமிழ்நாடு, மேற்கு வங்கம், ராஜஸ்தான், உத்திரபிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் இருந்துதான் 100 நாள் வேலைத் திட்டதுக்கு அதிக தேவை இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.