உபி-இல் அமையும் மெகா தொழிற்சாலை.. விரைவில் தொடங்கும் ஏகே 203 துப்பாக்கி உற்பத்தி.. ஏன் முக்கியம்?
டெல்லி: உத்தரப் பிரதேச மாநிலம் அமேதியில் அதிநவீன ஏகே 203 துப்பாக்கிகளை உற்பத்தி செய்ய மத்திய அரசு அனுமதித்துள்ளது. இந்த துப்பாக்கி மூலம் சுமார் 300 மீட்டர் உள்ள இலக்குகளைக் கூட துல்லியமாகச் சுட முடியும்.
இந்திய ராணுவத்திற்குத் தேவையான ராணுவ தளவாடங்கள் பெரும்பாலும் ரஷ்யா, அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகின்றன.
இந்த நிலையை மாற்றி, உள்நாட்டில் ராணுவ தளவாடங்களின் உற்பத்தியை அதிகரிக்கப் பல ஆண்டுகளாக முயற்சிகள் எடுக்கப்பட்டன.
கார்த்திகை அமாவாசையில் கங்கை நீர் பொங்கி வரும் ஸ்ரீதர அய்யாவாள் மடம் - பக்தர்கள் நீரடல்
மெகா தொழிற்சாலை
இந்திய ராணுவத்தில் தற்போது முக்கிய போர் விமானங்களில் ஒன்றாக உள்ள தேஜஸ் போர் விமானம் முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது தான். இந்தச் சூழலில் உத்தரப் பிரதேச மாநிலம் அமேதியில் அதிநவீன ஏகே 203 துப்பாக்கிகளை உற்பத்தி செய்யும் பிரம்மாண்ட ஆலையை நிறுவ மத்திய அரசு அனுமதித்துள்ளது. அமேதியின் கோர்வா என்ற பகுதியில் அமையவுள்ள இந்த மெகா துப்பாக்கி ஆலை மூலம் வேலை வாய்ப்புகள் உருவாகும் என்றும் சிறு மற்றும் குறு தொழில்கள் பெருகும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அதென்ன ஏகே 203
ஏகே 203 என்பது ரஷ்யா உருவாக்கியுள்ள அதிநவீனத் துப்பாக்கியாகும். ஏகே 47 துப்பாக்கிகளைப் போலவே இந்தத் துப்பாக்கிகளும் ராணுவத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கும் என ரஷ்யா நம்பிக்கை தெரிவித்துள்ளது. இதே அளவுள்ள துப்பாக்கிகளில் 5.56 மிமீ அளவுள்ள குண்டுகள் தான் பயன்படுத்தப்படும் நிலையில், இந்த ஏகே 203 துப்பாக்கியில் 7.62 மிமீ அளவுள்ள குண்டுகளைப் பயன்படுத்தலாம். இதன் மூலம் வெகு தொலைவில் உள்ள இலக்குகளைக் கூட துல்லியமாகத் தாக்க முடியும்.
பழைய துப்பாக்கிகள்
இந்திய ராணுவத்தில் கடந்த 30 ஆண்டுகளாகவே இன்சாஸ் ரக துப்பாக்கிகள் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. 1980களின் பிற்பகுதியில் உருவாக்கப்பட்ட இந்த துப்பாக்கிகளின் தொழில்நுட்பம் பழமையான ஒன்றாக மாறிவிட்டது. இந்திய ராணுவத்தில் இன்சாஸ் துப்பாக்கிகளுக்குப் பதிலாக ஏகே 203 துப்பாக்கிகளைப் பயன்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அமேதி ஆலையில் உற்பத்தி தொடங்கப்பட்ட உடன் படிப்படியாக இந்த அதிநவீனத் துப்பாக்கிகள் ராணுவத்தில் சேர்க்கப்படும்.
ஏன் முக்கியம்
மிகவும் குறைந்த எடையுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த துப்பாக்கியின் மூலம் சுமார் 300 மீட்டர் உள்ள இலக்குகளைக் கூட துல்லியமாகச் சுட முடியும். மேலும், சிறப்பு மிஷன்களுக்கு பயன்படுத்தக் கூடி வகையில் கூடுதலாக லென்ஸ் உள்ளிட்ட உபகரணங்களைக் கூட இதில் இணைத்துக் கொள்ள முடியும் என்பது இதன் மற்றொரு சிறப்பம்சம் ஆகும். இந்தியா ரஷ்யா இணைந்து உற்பத்தி செய்யும் இந்த துப்பாக்கி இந்தியா ராணுவத்தில் மிக முக்கியமான ஒன்றாக மாறும் வாய்ப்புள்ளது
அமேதி தொகுதி
உத்தரப் பிரதேசத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடக்கும் நிலையில், இந்த மெகா துப்பாக்கி தொழிற்சாலை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதிலும் இந்த துப்பாக்கி தொழிற்சாலை அமையவுள்ள அமேதி தொகுதி பல தலைமுறைகளாகக் காங்கிரஸின் கோட்டையாக இருந்து வந்தது. ராஜீவ் காந்தி, சோனியா காந்தி, ராகுல் காந்தி என முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் அங்கிருந்து தான் நாடாளுமன்றத்திற்குச் சென்றனர். இருப்பினும், கடந்த 2019இல் அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் ராகுல் காந்தியை பாஜகவின் ஸ்மிருதி இராணி வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.