பிளாஸ்பேக் 2019: 2019ல் பிரதமர் மோடி- அமித்ஷாவின் சாதனைகள்.. கண்ணில் முள்ளாக தைத்த ஒரு விஷயம்!
டெல்லி: பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா கூட்டணி நிகழ்த்திய மாயாஜாலங்கள் 2019ல் ஏராளம். என்றாலும்... முக்கியமானது என்றால் மீண்டும் மத்தியில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது தான்.
அத்துடன் முத்தலாக் மசோதா கொண்டுவந்தது. காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது, பொதுத்துறை வங்கிகளை 12 ஆக குறைந்ததது. ராமர் கோயில் கட்ட உச்ச நீதிமன்றத்தில் அனுமதி, குடியுரிமை திருத்த சட்டம் போன்றவை பாஜகவின் கனவு திட்டங்கள் இவை அனைத்தையும் இந்த ஆண்டு பாஜக சாதித்துவிட்டது.
இந்த தேசத்தில் விரும்பிய மாற்றத்தை செய்ய வேண்டும் என்றால் அதற்கு அதிகாரத்தை கைப்பற்றுவதுன் ஒரே வழி. அதைத்தான் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா கூட்டணி கச்சிதமாக செய்தது.
வடமாநில நிலவரம்
2019 லோக்சபா தேர்தல் பாஜகவுக்கு எளிதாக இருக்கும் என்று தேர்தல் முடிவுகள் வெளியாகும் வரை தமிழகத்தில் பலரும் கணித்திருக்க மாட்டார்கள். ஏனெனில் இந்தியாவிலேயே பாஜகவுக்கு கடும் எதிர்ப்பு இங்கு தான் இருந்தது. ஆனால் வட மாநிலங்களில் அப்படி இல்லை. முற்றிலும் அங்கு கள நிலவரம் வேறு.
பாகிஸ்தான்
குண்டுவெடிப்பு, போர், பாகிஸ்தான் அச்சுறுத்தல், கலவரம் போன்ற பிரச்சனைகளை அதிகம் எதிர்க்கொண்ட வடமாநில மக்களை தேசபக்தி என்ற அஸ்திரம் மூலம் வளைத்தது மோடி அமித்ஷா கூட்டணி. இந்து ராஜியம் அமைக்க வேண்டும் என்று விரும்பியவர்களின் ஓட்டு பாஜகவுக்கு தானாக விழுந்தது என்றால் இன்னொரு பக்கம் மோடியால் மட்டுமே வலிமையான பெரும்பான்மை உள்ள அரசை உருவாக்க முடியும் என்று இந்த கூட்டணி நம்பிக்கையை விதைத்து.
வேட்பாளர்கள்
அத்துடன் பலமான வேட்பாளர்கள், அமித்ஷாவின் மாநிலத்திற்கு மாநிலம் சாதூர்யமான தேர்தல் வியூகங்கள் ஆகியவை பாஜகவுக்கு கைகொடுத்து. அத்துடன் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையின்மை மிகப்பெரிய பலமாக மோடி அமித்ஷா கூட்டணிக்கு மாறியது. இதை சரியாக பயன்படுத்தி மோடி அமித்ஷா கூட்டணி 2014ம் ஆண்டை விட மிகப்பெரிய வெற்றியை நாடாளுமன்ற தேர்தலில் பெற்று ஆட்சியமைத்தது.
சிறப்பு அந்தஸ்து
அதன்பிறகு தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் செயலாக ஒவ்வொன்றாக பாஜக அதிரடியாக செய்ய ஆரம்பித்தது. பாஜக எடுத்த முதல் அஸ்திரம் என்றால் ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது. இந்த நடவடிக்கையை கண்டு எதிர்க்கட்சியான காங்கிரஸே அதிர்ச்சியில் உறைந்தது. மிக தைரியமான முடிவு என்று போற்றப்பட்டது. அதேநேரம் மனித உரிமை மீறல் என்றும் எதிர்ப்புகள் வந்தது.
உபா சட்டம்
இன்னொரு முக்கியமான விஷயம் என்றால் முத்தலாக் மசோதாவை நிறைவேற்றியது. இந்த மசோதாவை கடந்த ஆட்சியில் பிரதமர் மோடி அரசால் சட்டமாக்க முடியவிலலை. ஆனால் இந்த முறை சட்டமாக்கியது. இதேபோல் உபா சட்டத்தையும் கொண்டுவந்தது. என்ஐஏ எனப்படும் தேசிய புலனாய்வு பிரிவுக்கு அளப்பரிய அதிகாரம் அளிக்கும் சட்டத்தை கொண்டுவந்தது இச்சட்டப்படி ஒருவரை தீவிரவாதி அல்லது தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடையவர் என்று அறிவிக்க முடியும்.
12 ஆக குறைப்பு
அடுத்ததாக பொதுத்துறை வங்கிகளை 27ல் இருந்து ஒரே நாளில் 12ஆக குறைத்து மாற்றியது. நஷ்டம் அடைந்த வங்கிகளை பெரிய வங்கிகளுடன் இணைத்து நஷ்டத்தை குறைக்கும் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கையாக இதையும் மோடி அரசு செய்தது.
உச்ச நீதிமன்றம்
இன்னொரு முக்கியமான விஷயம் என்றால் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்து தீர்ப்பளித்தது. இதில் மோடி அமித் ஷாவுக்கு எந்த சம்பந்தம் இல்லை என்று சட்ட ரீதியாக சொன்னாலும் அவர்கள் ஆட்சியில் இது நடந்திருப்பதால் மோடி அரசின் பெரும் சாதனையாகவே பார்க்கப்படுகிறது.
என்ஆர்சி பதிவேடு
கடைசியாக ஒருவிஷயத்துடன் முடித்துவிடலாம். அதுதான் குடியுரிமை திருத்த சட்டம். இந்த சட்டத்தை பல கடுமையான எதிர்ப்புகளுக்கு இடையே மோடி அமித்ஷா கூட்டணி சட்டமாக்கி உள்ளது. இந்த சட்டப்படி வங்கதேசம் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் இருந்து வந்த இந்துக்கள், கிறிஸ்தவர்கள்,புத்தர்கள் உள்பட 6 சிறுபான்மையினருக்கு குடியுரிமை அளிக்கப்பட உள்ளது. இதுமட்டுமின்றி அஸ்ஸாமில் என்ஆர்சி பதிவேட்டையும் வெளியிட்டுள்ளது. மோடி அமித்ஷாவின் மேற்கண்ட அனைத்த சாதனைகளுக்கும் முதல் சாதனையான அதிகாரத்தை கைப்பற்றியதே கைகொடுத்தது.
சிவசேனா செயல்
முக்கியமான இரு விஷயத்தை மறந்துவிட்டேன்.. ஆம்.. கர்நாடகாவில் மீண்டும் பாஜக ஆட்சியை கைப்பற்றியதில் மோடி-அமித்ஷா கூட்டணிக்கு பெரும்பங்கு இருப்பதை மறுக்க முடியாது. இன்னொரு முக்கியமான விஷயம் அரியானாவில் ஆட்சிக்கு வாய்ப்பு மீண்டும் இல்லை என்ற நிலையை மாற்றி கூட்டணி அமைத்து ஆட்சியமைத்ததும் முக்கியமானது. ஆனால் மோடி அமித்ஷா கூட்டணிக்கு கண்ணில் பாய்ந்த முள்ளாக வந்த விஷயம் என்றால் சிவசேனா தான். அந்த கட்சி அடித்த பல்டியால் மோடி அமித்ஷா கூட்டணியின் அரசியல் சாணக்கியம் மாகாராஷ்டிராவில் எடுபடாமல் போனது என்பதே எதார்த்தம்.