துறையூர் படிக்காசு நிகழ்ச்சியில் 7 பேர் பலியான விபரீதம்.. ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்த மோடி
டெல்லி:திருச்சி அருகே கோயில் விழா கூட்ட நெரிசலில் சிக்கி இறந்த 7 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
துறையூர் அருகே முத்தையம்பாளையத்தில் பிரசித்தி பெற்ற கருப்பசாமி கோவில் உள்ளது. இங்கு சித்ரா பவுர்ணமி விழா முடிந்த 3வது நாளில் பிடிக்காசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும். கோவில் உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் சில்லரைக் காசுகள் பக்தர்களுக்கு வழங்கப்படும்.
அந்தக் காசை வாங்கிச் சென்று வீட்டில் வைத்து வழிபட்டால் செல்வம் பெருகும் என்பது மக்களின் நம்பிக்கை. எனவே நிகழ்ச்சியில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
முண்டியத்த கூட்டம்
பிடிக்காசினை கோவில் பூசாரி பக்தர்களுக்கு வழங்கிக் கொண்டிருந்த போது, அதை வாங்குவதற்கு கூட்டம் முண்டியடித்தது. அதனால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
7 பேர் உயிரிழப்பு
பக்தர்கள் ஒருவரை ஒருவர் தள்ளியதில் கீழே விழுந்து பலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. ஒருவர் மீது ஒருவர் ஏறிச் சென்றனர். அதில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எடப்பாடி அறிவிப்பு
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே கோயில் விழாவின் போது இறந்த 7 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்த 12 பேருக்கு தலா ரூ.50,000 வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
மோடி நிவாரணம்
துறையூர் அருகே கோயில் விழாவின் போது இறந்த 7 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இது குறித்து அவர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
குணமடைய பிரார்த்தனை
கோயில் விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்த 12 பேருக்கு தலா ரூ.50,000 வழங்கப்படும். துறையூர் கோயில் விழா கூட்ட நெரிசலில் பலியானவர்கள் குறித்து செய்தியறிந்து கவலை அடைந்தேன். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகள் அதிகாரிகள் செய்வார்கள் என்று தெரிவித்துள்ளார்.