சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் எங்கே? - மன்மோகன் சிங்கிற்கு பிரதமர் மோடி கேள்வி!
டெல்லி: "முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் எங்கே?" என்று, பிரதமர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.
லோக்சபா தேர்தல் பிரச்சாரத்தில் தேசிய பாதுகாப்பை பிரதானப்படுத்தி பிரதமர் மோடி பேசி வருகிறார். பாகிஸ்தான் எல்லையோரம் தீவிரவாதிகள் மீது ராணுவம் நடத்திய சர்ஜிக்கல் ஸ்டிரைக் மற்றும் விமான தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கோள்காட்டி பிரச்சாரம் செய்து வருகிறார்.
இதற்கு பதிலடியாக, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியிலும் 6 முறை சர்ஜிக்கல் ஸ்டிரைக் ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கூறினார். அரசியல் ஆதாயத்திற்காக பிரதமர் மோடி போல நாங்கள் இதனை வெளியில் சொல்லவில்லை," என்றும் கூறினார்.
மன்மோகன் சிங் இவ்வாறு கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், பிரதமர் மோடி ராணுவ நடவடிக்கைகளை அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்துவதாகவும் காங்கிரஸ் குற்றம் சாட்டியது. இந்த நிலையில், மன்மோகன் சிங் கூறிய சர்ஜிக்கல் ஸ்டிரைக் தாக்குதல்களுக்கு ஆதாரம் எங்கே என்று பிரதமர் மோடி கேள்வி எழுப்பி உள்ளார்.
ராஜீவ் காந்தி மீது மோடியின் விமர்சனங்கள் தேவையில்லாதது- மோடியே எதிர்பார்க்காத இடத்திலிருந்து கண்டனம்
இதுகுறித்து ஹிந்துஸ்தான் டைம்ஸ் இதழுக்கு பேட்டி அளித்த அவர் கூறியிருப்பதாவது," எனக்கு தெரிந்தவரை ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் எந்த ஒரு துல்லிய தாக்குதலும் நடத்தப்படவில்லை. அப்போது ராணுவ தளபதிகளாக இருந்தவர்களிடம் எந்த ஒரு தகவலும் இல்லை.
அது என்ன மாதிரியான துல்லிய தாக்குதல்? யார் உத்தரவு கொடுத்தது? அதற்கான உத்தரவு ஆதாரங்கள் எங்கே? இந்த கேள்விகளுக்கு அவர்களிடம் பதில் கேட்க வேண்டும். இதுதொடர்பாக, எந்த ஒரு பதிவேடுகளும் கூட இல்லை.
கடந்த ஒரு தசாப்தத்திற்கு மேலாக பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் மீது நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் இந்திய அரசு தனது கைகளையே தானே கட்டிக் கொண்டு வேடிக்கை பார்த்தது. இதனால், பாகிஸ்தான் மறைமுகமாக தாக்குதல்களை அரங்கேற்றி வந்தது. இது தீவிரவாதிகள் மற்றும் அவர்களுக்கு நிதி உதவி செய்பவர்களுக்கும் எப்படியாவது தப்பிவிடலாம் என்ற எண்ணத்தை கொடுத்தது.
எமது ஆட்சியில் எல்லை தாண்டிய தீவிரவாதிகள் மீது நடத்தப்பட்ட சர்ஜிக்கல் ஸ்டிரைக் மற்றும் அண்மையில் நடத்தப்பட்ட வான் வழி தாக்குதல் மூலமாக தீவிரவாதிகளும் மற்றும் அதற்கு துணைபோகிறவர்களும் பெரும் விலை கொடுக்க வேண்டி இருக்கும் என்பதை உணர்த்தியுள்ளோம்.
அதேபோன்று, ஜெய்ஷ் இ முகம்மது தீவிரவாத இயக்கத் தலைவன் மசூத் அசாரை ஐ.நா. அமைப்பு சர்வதேச தீவிரவாதியாக அறிவித்திருப்பது சீனா சம்பந்தப்பட்ட விஷயமாக பார்ப்பது தவறு. இது உண்மையில் சர்வதேச தீவிரவாதமாக கருத வேண்டும்," என்று அவர் கூறினார்.
இந்த லோக்சபா தேர்தல் மிகவும் சிறப்பு வாய்ந்தது. 21ம் நூற்றாண்டில் பிறந்த இந்திய இளைஞர்கள் வாக்களிக்கும் முதல் தேர்தல். அவர்கள் சிறப்பான எதிர்காலத்திற்காக வாக்களிக்கின்றனர். கடந்த 2014ம் ஆண்டு போலவே, இந்த தேர்தலிலும் வெற்றி பெற்று மீண்டும் பிரதமர் ஆவேன்," என்று மோடி தெரிவித்துள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம் காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் ராணுவ வீரர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, பாகிஸ்தான் எல்லையில் செயல்பட்டு வந்த தீவிரவாத முகாம் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது.
அப்படி ஒரு தாக்குதல் நடத்தப்படவில்லை என்று பாகிஸ்தான் மறுத்து வருகிறது. தாக்குதல் நடத்தியதற்கான சரியான ஆதாரங்களை காட்டுங்கள் என்று பிரதமர் மோடியிடம் பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில், முந்தைய ஆட்சியில் துல்லிய தாக்குதல் நடத்தப்பட்டதாக மன்மோகன் சிங்கிடம் பிரதமர் மோடி ஆதாரம் கேட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.