பிரதமர் மோடியை நேரடியாக கடுமையாக தாக்கிய ராகுல் காந்தி.. இதுதான் பின்னணி
டெல்லி: ராஜீவ் காந்தி அறக்கட்டளையின் செயல்பாடுகள் குறித்து விசாரணை குழுவை மத்திய அரசு அறிவித்த நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளதுடன் பிரதமர் மோடியையும் விமர்சித்துள்ளார்.
அனைவரையும் மிரட்ட முடியும் என்றும், தன்னை போன்று பிறர் இருக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி நினைப்பதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.
ராஜீவ் காந்தி அறக்கட்டளை (ஆர்ஜிஎஃப்) உட்பட சோனியா காந்தி குடும்பத்தினரால் நடத்தப்படும் மூன்று அறக்கட்டளைகள், பண மோசடி தடுப்பு சட்டம் (பி.எம்.எல்.ஏ), வருமான வரி சட்டம், வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்டம் போன்ற சட்டங்களை மீறியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துது.
உலகமே தன்னை போல இருக்கும் என மோடி நினைக்கிறார்.. சத்தியத்திற்கு விலை கிடையாது- ராகுல் காந்தி ஆவேசம்
மிரட்ட முயற்சி
இது தொர்பாக நடத்தப்பட உள்ள விசாரணையை ஒருங்கிணைக்க அமலாக்க இயக்குநரகத்தின் சிறப்பு இயக்குநர் தலைமையில் அமைச்சகங்களுக்கு இடையேயான குழுவை மத்திய அரசு. அமைத்துள்ளது இந்த விவகாரம் தொடர்பாக ராகுல் காந்தி மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். 'சத்தியத்திற்காக போராடுபவர்களை' மிரட்டுவதற்கு மோடி அரசு முயற்சிப்பதாக ராகுல் காந்தி ட்வீட்டில் குற்றம் சாட்டியுள்ளார்.
மோடி மீது தாக்கு
பிரதமர் மோடி மீது இந்த விஷயத்தில் நேரடியாக குற்றம்சாட்டியுள்ளார். அவர் தனது ட்விட்டில் "திரு மோடி உலகம் அவரைப் போன்றது என்று நம்புகிறார். அனைவருக்கும் ஒரு விலை இருப்பதாக அவர் நினைக்கிறார் அல்லது மிரட்ட முடியும் என்று நினைக்கிறார். சத்தியத்திற்காக போராடுவோருக்கு விலை இல்லை, இருக்க முடியாது என்பதை அவர் (மோடி) ஒருபோதும் புரிந்து கொள்ள மாட்டார். சத்தியத்திற்காக போராடுபவர்களை மிரட்டவும் முடியாது" இவ்வாறு கூறினார்.
சோனியா காந்தி குடும்பம்
ராஜிவ் காந்தி அறக்கட்டளையின் தலைவராக சோனியா காந்தியும், உறுப்பினர்களாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த அறக்கட்டளைக்கு வரும் நிதி தொடர்பாகத்தான் விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
சீன நிதி விவகாரம்
சீன எல்லை பிரச்சினையின் போது இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீர மரணமடைந்த போது, மத்திய அரசையும், பிரதமர் மோடியையும், காங்கிரஸ் தலைவர்கள் கடுமையாக விமர்சனம் செய்தார்கள், பிஎம்கேருக்கு சீன நிறுவனங்கள் பணம் தந்ததாக காங்கிரஸ் குற்றம்சாட்டியது. இதற்கு பதிலடியாக சீனா தூதரகத்திடமிருந்து சோனியா குடும்பம் நடத்தும் அறக்கட்டளைகளுக்கு 2005ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை நன்கொடை பெறப்பட்டதாக பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா குற்றம்சாட்டினர். இதைத்தொடர்ந்து தற்போது அமலாக்க இயக்குநரகத்தின் சிறப்பு இயக்குநர் தலைமையில் அமைச்சகங்களுக்கு இடையேயான குழுவை மத்திய அரசு. அமைத்துள்ளது. இதையடுத்து தான் ராகுல் காந்தி, பிரதமர் மோடியை நேரடியாக கடுமையாக விமர்சித்துள்ளார்.