அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு இன்பத் தகவல் கொடுத்த மோடி அரசு!
சென்னை: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மோடி அரசு ஒரு பம்பர் பரிசை வழங்கியுள்ளது.
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படியை 4 சதவீதமாக உயர்த்தி, மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. போலவே, யெஸ் வங்கியின் மறுசீரமைப்பு திட்டத்திற்கு அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு நிருபர்களிடம் பேசிய, அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கர் இதுபற்றி கூறுகையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு தற்போது வழங்கப்படும் 17 சதவீத அகவிலைப்படி, 21 சதவீதமாக உயர்த்தப்படுகிறது. இதனால், அரசு கருவூலத்திற்கு கூடுதலாக ரூ .14,595 கோடி செலவாகும்.
48 லட்சம் அரசு ஊழியர்கள், 65 லட்சம் ஓய்வூதியம் பெறுவோர் இதனால் பலனடைவார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அரசு ஊழியர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த அகவிலைப்படி (டிஏ) வழங்கப்படுகிறது. நீண்ட நாட்களாக நாட்களாக, அகவிலைப்படியை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வந்தது.
முன்னதாக, மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக வழங்கிய பதிலில், மத்திய நிதியமைச்சர் அனுராக் சிங் தாக்கூர், மார்ச் மாத சம்பளத்துடன், மத்திய அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு கிடைக்கும் என்று தெரிவித்திருந்தார்.
தற்போது, அமைச்சரவையில், இதற்கான ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.