ஏழைகளுக்கு குறைந்தபட்ச ஊதியம்… ராகுலின் அறிவிப்பை செயல்படுத்த பாஜக முடிவு
Recommended Video
டெல்லி: ராகுல் காந்தியின் அறிவிப்புக்கு போட்டியாக வரும் பட்ஜெட்டில் பிரதமர் மோடியும் குறைந்த பட்ச வருவாய் உறுதியளிப்பு திட்டத்தை அறிவிப்பார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
சத்தீஸ்கர் மாநிலத்தில் பேசிய ராகுல் காந்தியின் பேச்சு... இவ்வளவு விரைவாக நாடு முழுவதும் விவாதிக்கப்படும் பொருளாக மாறக்கூடும் என்பதை காங்கிரஸ் கட்சியினரே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். தேர்தலுக்கான காலம் நெருங்க, நெருங்க.. பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளை தவிர்த்து மற்ற கட்சியினரும் நம்பிக்கை வார்த்தைகளை மக்களை நோக்கி வீச ஆரம்பித்து விட்டனர்.
அதில் குறிப்பாக ராகுல் காந்தி பேசிய ஏழைகளுக்கு குறைந்தபட்ச ஊதியம் தருவோம் என்று அறிவிப்புதான் நாடு முழுவதும் வேகமாக பேசப்பட்டு வருகிறது. அதன் தாக்கத்தை உணர்ந்த பாஜகவும் பதிலடி கொடுக்க தயாராகி உள்ளது.
பட்ஜெட்டில் அறிவிப்பு?
இந்நிலையில், காங்கிரசுக்கு போட்டியாக பாஜகவும் இந்த திட்டத்தை பிப்ரவரி 1ம் தேதி பட்ஜெட்டில் அறிவிக்கலாமா என்று யோசனை செய்து வருகிறது. வரும் பட்ஜெட்டில் இந்தத் திட்டத்தை அறிந்து சோதனை முயற்சியாக சில கிராமங்களில் நடைமுறைப்படுத்தலாம் என்று திட்டமிட்டு வருகிறது. திட்டத்தின் உண்மையான பயனாளிகளின் விவரம், பயன்பெறுபவர்களின் மன நிலை குறித்து அறிந்து கொள்ள முடியும் என்றும் அக்கட்சி நம்புகிறது.
ஆய்வறிக்கையின் அம்சங்கள்
2016-17ம் ஆண்டு பொருளாதார ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த சில அம்சங்கள் தற்போது கவனிக்கப்பட வேண்டியவையாக மாறி உள்ளன. குறிப்பாக, நாடு முழுவதும் உள்ள அடித்தட்டு மக்களில் 75 சதவீதம் பேரின் குடும்பத்துக்கு ரூ.630 என்ற குறைந்தபட்ட ஊதிய அளவீட்டை அப்போதைய பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன் குறிப்பிட்டிருந்தார்.
நிதி நெருக்கடி
ஆனால் இந்தத் திட்டம் இனிவரும் காலங்களில் செயல்படுத்தும் போது கோடிக்கணக்கில் நிதி தேவை. அந்த தருணத்தில் ஏற்படப்போகும் நெருக்கடியை அரசு எவ்வாறு கையாளும் என்பது பெரும் கேள்விக்குறியாகும். உணவுக்கு மானியமாக தற்போது ரூ.1.70 லட்சம் கோடியோடு, 100 நாட்கள் வேலைவாய்ப்பு திட்டத்துக்கு ரூ.55 ஆயிரம் கோடியையும் சேர்க்கும் போது, நிதிப் பற்றாக்குறை அதிகரிக்கும்.
கூடுதல் சுமை
அனைவருக்கும் குறைந்தபட்ச ஊதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால், ஆண்டுக்கு அரசுக்கு ரூ. 6,540 கோடி முதல் ரூ.7,620 கோடி வரை கூடுதலாக செலவாகும். கடந்த 2011-12ம் ஆண்டில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு மத்தியப் பிரதேசத்தில் 8 கிராமங்களில் இந்த திட்டத்தை சோதனை முயற்சியாகச் செயல்படுத்தியது.
பொருளாதார நிபுணர்கள் கருத்து
ஆனால், அது எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது என்பது குறித்த விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. பட்ஜெட்டில் இந்தத் திட்டம் அறிமுகப் படுத்தப்பட்டால் எத்தனை கிராமங்களில் நடைமுறைக்கு வரும் என்பது கேள்விக் குறியாகும் என்று பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.