காஷ்மீர்.. ஒமர் அப்துல்லா பேச்சால் காங்கிரசுக்கு சிக்கல்.. தேர்தல் பிரச்சாரத்தில் திடீர் திருப்பம்
டெல்லி: காஷ்மீருக்கு தனி பிரதமர், குடியரசு தலைவர் தேவை என்று காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டுக் கட்சி தலைவருமான ஒமர் அப்துல்லா பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கூட்டணி கட்சியான காங்கிரசின் நிலைப்பாடு என்ன என்று பிரதமர் நரேந்திர மோடி கேள்விக் கணைகளை தொடுத்துள்ளார். தேர்தல் பிரச்சாரத்தில் தற்போது புது திருப்பத்தை ஏற்படுத்தும் விவகாரமாக இது மாறிப்போயுள்ளது.
பந்திபோரா மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பொதுக் கூட்டத்தில் ஒமர் அப்துல்லா பேசுகையில், சில சர்ச்சைக்குரிய விஷயங்களை எடுத்து வைத்தார்.
பாருங்க.. உங்களால் ஸ்பேஸ் ஸ்டேஷனுக்கே ஆபத்து.. மிஷன் சக்தியை கேள்விகளால் துளைக்கும் நாசா!
பிரதமர், குடியரசு தலைவர்
ஒமர் அப்துல்லா பேசியதாவது: நாடு சுதந்திரம் பெற்ற போது பிற மாநிலங்கள் எந்த நிபந்தனையுமின்றி, இந்தியாவுடன் இமைந்தன. ஆனால் ஜமம்மு காஷ்மீர் சில நிபந்தனைகளோடுதான் இணைந்தது. அதில் சுயமான அடையாளம் வேண்டும், சொந்த அரசியலமைப்பு, சொந்த கொடி வைத்துக் கொள்வது போன்றவையும் அடங்கும். 1947ம் ஆண்டு நமக்கு தனி பிரதமர், தனி குடியரசு தலைவர் இருந்தனர். அதே நிலை திரும்ப கொண்டுவரப்படும்.
தமிழகத்தோடு ஒப்பிட முடியாது
உத்த பிரதேசம், பீகார், மத்திய பிரதேசம் அல்லது தமிழ்நாடு போல காஷ்மீரை ஒப்பிட முடியாது. எந்த மாநிலமாவது தனி அரசியலமைப்பு அல்லது, தனிக் கொடி கொண்டவையா? சில நிபந்தனைகளின்பேரில் இந்தியாவுடன் காஷ்மீர் இமைந்தது. அப்படியிருக்கும்போது, 70 வருடம் கழித்து இப்போது அது தவறு என சொல்வது தவறான விஷயம். இவ்வாறு ஒமர் அப்துல்லா கூறினார். பாஜக தலைவர் அமித்ஷா சமீபத்தில் அளித்த பேட்டியில், பாஜக அரசு அமைந்தால் காஷ்மீருக்கு 35-A பிரிவு மூலம் வழங்கப்படும் சிறப்பு அந்தஸ்தை நீக்க நடவடிக்கை எடுப்போம் என கூறினார். இதற்கு ஒமர் அப்துல்லா பதிலடியாக இவ்வாறு கூறினார்.
மோடி கேள்வி
இதனிடையே, பிரதமர் நரேந்திர மோடி ஹைதராபாத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் இதுபற்றி பேசுகையில், காங்கிரசின் முக்கியமான ஒரு கூட்டணி கட்சியான தேசிய மாநாட்டு கட்சி, காஷ்மீருக்கு தனி பிரதமர், குடியரசு தலைவர் தேவை என கூறியுள்ளது. இதுபற்றி காங்கிரஸ் தனது கருத்தை எடுத்துரைக்க வேண்டும் என்றார்.
அருண் ஜெட்லி
இதுபற்றி நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறுகையில், காஷ்மீரில் பிரிவினைவாதிகள் இந்தியாவிலிருந்து தனி நாடாக பிரிந்து செல்ல முயற்சி செய்கிறார்கள். அவர்களின் குரலாக அம்மாநிலத்தின் இரு முக்கிய கட்சிகள் இருப்பது சரியானது இல்லை. புதிய இந்தியா இதற்கு அனுமதிக்காது. மக்களின் மதிப்பை இவர்கள் இழப்பார்கள் என்று கூறியுள்ளார்.
தேர்தல் பிரச்சாரம்
தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸ் கூட்டணிக்கு எதிரான ஆயுதமாக பாஜக இதை கையில் எடுத்துள்ளது. ஒமர் அப்துல்லா காஷ்மீர் விவகாரம் குறித்து பேசினாலும், கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு இது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது என்பது உண்மை.