மோடி பாகிஸ்தான் பிரதமர் இம்ரானை சந்திக்கும் திட்டம் எதுவும் இல்லை.. வெளியுறவுத் துறை தகவல்
டெல்லி: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை, பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசும் திட்டம் எதுவும் இல்லை என இந்திய வௌியுறவுத்துறை திட்டவட்டமாக கூறியுள்ளது. நல்லெண்ண அடிப்படையில் இம்ரான் கானை மோடி சந்திப்பார் என வெளிான தகவலுக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் நாட்டின் வெளியுறவுத் துறைச் செயலரான சொஹைல் மஹ்மூத், தனிப்பட்ட முறையில் மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதராக பதவி வகித்த சொஹைல், தற்போது பாகிஸ்தான் வெளியுறவுத் துறைச் செயலராக உள்ளார்.
இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் பொறுப்பிலிருந்து, கடந்த ஏப்ரல் மாதம் விடுவிக்கப்பட்ட சொஹைல், அந்நாட்டு வெளியுறவுத் துறையின் மிக முக்கிய செயலர் பதவிக்கு நியமிக்கப்பட்டார். இந்தியாவுடனான தூதரக உறவை மேம்படுத்தும் நோக்கில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிகிறது.
இவரது குடும்பத்தினர் மற்றும் குழந்தைகள் வசித்து வந்தனர். இந்நிலையில் அவர்கள் அனைவரையும் தற்போது பாகிஸ்தானுக்கே கூட்டிச் செல்வதற்காக அவர் இந்தியாவிற்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது டெல்லியில் உள்ள சொஹைல் நேற்று ரமலான் பெருநாளையொட்டி, டெல்லி ஜாமா மசூதியில் தொழுகை நடத்தினார். வரும் வெள்ளிக்கிழமை மீண்டும் பாகிஸ்தான் திரும்ப உள்ளசொஹைல், தாயகம் திரும்புவதற்குள் இந்திய அதிகாரிகள் அல்லது தலைவர்களைச் சந்தித்துப் பேச திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளரான ரவீஷ் குமார், பாகிஸ்தான் வெளியுறவு துறை செயலரான சொஹைல் சொந்த காரணங்களுக்காக தற்போது இந்தியாவிற்கு வந்துள்ளார். எனவே அவருடன் இந்திய அதிகாரிகள் யாரும் சந்தித்து பேச வாய்ப்பில்லை என கூறினார்.
Raveesh Kumar, MEA: To the best of my knowledge no meeting has been planned between PM Modi and Pakistan PM Imran Khan at the SCO Summit in Bishkek. pic.twitter.com/KJoqE00Uf6
— ANI (@ANI) June 6, 2019
மேலும் பேசிய ரவீஷ்குமார் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்கும் மோடி, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை சந்தித்து பேச வாய்ப்பில்லை என திட்டவட்டமாக கூறியுள்ளார். மேலும் பேசிய அவர் ஈரானிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், வர்த்தக கருத்தாய்வு, ஆற்றல் பாதுகாப்பு மற்றும் நமது தேசிய நலன் ஆகியவற்றை கருத்தில் கொண்டே முடிவுகளை எடுக்க முடியும் என்றார்.
கடந்த கூட்டங்களில் முன்வைக்கப்பட்ட சில முக்கிய விவகாரங்கள் குறித்து பாகிஸ்தானிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. தற்போது அந்நாட்டின் பதிலுக்காக காத்திருப்பதாக கூறினார்.
மேலும் பேசிய ரவீஷ்குமார் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நாளை மற்றும் நாளை மறுதினம் பூட்டான் நாட்டிற்கு செல்ல உள்ளதாக கூறினார். வெளியுறவுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள ஜெய்சங்கரின், முதல் வெளிநாட்டு பயணமாக இது அமைந்துள்ளது என்றார்.
அவரது இந்த பயணம் பூட்டான் உடனான இருதரப்பு உறவுக்கு, இந்தியா அளிக்கும் முக்கியத்துவத்தை பிரதிபலிக்கும் விதமாக இந்த பயண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.