விவசாயிகள் போராட்டம்... இது ஆரம்பம் மட்டுமே - ராகுல்காந்தி ட்வீட் #IamWithFarmers
சத்தியத்திற்கான போரில் போராடும் விவசாயிகளை உலகில் எந்த அரசாங்கமும் தடுக்க முடியாது என்று ராகுல்காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
டெல்லி : சத்தியத்திற்கான போரில் போராடும் விவசாயிகளை உலகில் எந்த அரசாங்கமும் தடுக்க முடியாது என்றும் விவசாயிகளின் கோரிக்கைகளை மோடி அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் ராகுல்காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மத்திய பாஜக அரசு சமீபத்தில் அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம், விலை உறுதியளிப்பு மற்றும் பண்ணை ஒப்பந்த விவசாயச் சட்டம், விவசாயிகளின் விளைபொருள் உத்தரவாதச் சட்டம் ஆகிய 3 சட்டங்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது.
இந்த சட்டங்களின் மூலம் நேரடி கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டு, விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்காது என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்றும் எதிர்கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் விவசாயிகள் ரயில்மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர். தற்போது ரயில் மறியலை கைவிட்ட விவசாயிகள் டெல்லியை நோக்கி 'டெல்லி சலோ' என்ற போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
டெல்லியை நோக்கி.. வழியெங்கும் போர்க்களம்.. விவசாயிகள்-போலீசார் கடும் மோதல்!
டிராக்டர், பஸ், வேன் உள்ளிட்ட வாகனங்களில் விவசாயிகள் டெல்லியை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள். ஆனால், டெல்லிக்கு வரும் சாலைகளில் அனைத்து எல்லையிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். எல்லைகள் சீல் வைக்கப்பட்டன.
தங்களை தடுத்த காவல்துறையினர் மீது ஹரியானா பஞ்சாப் எல்லையான சம்போ பகுதியில் போராட்டக்காரர்கள் கற்களை வீசினர். இதனையடுத்து வஜ்ரா வாகனங்களின் மூலம் தண்ணீரை பீய்ச்சியடித்தும், தடியடி நடத்தியும் போராட்டக்காரர்களை காவல்துறையினர் கலைக்க முயற்சித்தனர். இதனால் அந்த இடமே போர்க்களமானது.
இந்த நிலையில் விவசாயிகள் போராட்டம் குறித்தும் காவல்துறையினர் தடியடி பற்றியும் ராகுல்காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஈகோ உண்மையுடன் மோதும் போதெல்லாம் அது தோற்கடிக்கப்படும் என்பதை பிரதமர் நினைவில் வைத்திருக்க வேண்டும்.
சத்தியத்திற்கான போரில் போராடும் விவசாயிகளை உலகில் எந்த அரசாங்கமும் தடுக்க முடியாது. விவசாயிகளின் கோரிக்கைகளை மோடி அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும், கறுப்புச் சட்டங்கள் திரும்பப் பெறப்பட வேண்டும். இது ஆரம்பம் மட்டுமே! என்று பதிவிட்டுள்ளார் ராகுல்காந்தி.