ராணுவத்திற்கு 'அவசரத் தேவை..' பாதுகாப்புத் துறைக்கு பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்க திட்டம்
டெல்லி: சீனா மற்றும் பாக்கிஸ்தானுடனான பதற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், "ராணுவத்தின் அவசரத் தேவையை" பூர்த்தி செய்ய மோடி அரசு 2021-22 நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்கு நிதியை உயர்த்தக்கூடும் என்று செய்திகள் வெளியாகி வருகின்றன.
மேக் இன் இந்தியா திட்டத்தின்கீழ், ஆயுதப்படைகளை நவீனப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. வரவிருக்கும் பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்கான ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டுகளை உள்நாட்டில் உற்பத்தி செய்ய ஊக்குவிக்கும் வகையில் நிதி ஒதுக்கீடு இருக்கும். உள்நாட்டு ஆய்வு மற்றும் மேம்பாடு மீது மத்திய அரசு அதிக கவனம் செலுத்தக்கூடும் என்று கூறப்படுகிறது.
"சீன எல்லை மற்றும் பாகிஸ்தான் எல்லையில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதை கருத்தில் கொண்டு, உடனடியாக செயல்படுத்த வேண்டிய பல நவீனமயமாக்கல் திட்டங்கள் உள்ளன. அவற்றில் ஹெலிகாப்டர்கள், போர் விமானங்கள், ட்ரோன்கள், பீரங்கிகள் கொள்முதல் ஆகியவை அடங்கும்" என்று ஒரு மூத்த பாதுகாப்பு அதிகாரியை மேற்கோளிட்டு பினான்சியல் எக்ஸ்பிரஸ் நாளிதழ் தெரிவித்துள்ளது.
ராணுவ தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக மத்திய அரசு கடந்த ஆண்டு பாதுகாப்பு பட்ஜெட்டை ஆறு சதவீதம் உயர்த்தியது. பின்னர், 101 பாதுகாப்பு பொருட்கள் மீதான இறக்குமதிக்கு தடையை அறிவித்து, பாதுகாப்பு துறையில் அந்நிய நேரடி முதலீட்டு (எஃப்.டி.ஐ) வரம்பை 74 சதவீதமாக உயர்த்தியது.
2021-22ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.