ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு.. நாட்டின் எந்த ரேஷன் கடையிலும் நீங்க பொருள் வாங்கலாம்! மத்திய அரசு அதிரடி
Recommended Video
டெல்லி: 'ஒரே நாடு ஒரே தேர்தல்' முழக்கத்தை தொடர்ந்து, 'ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு' என்ற திட்டத்தை கையில் எடுத்துள்ளது மத்திய அரசு. இதனால் இடம் பெயர்ந்து பணியாற்றும் தொழிலாளர்களுக்கு பலன்கள் கிடைக்கும் என்று அரசு கூறுகிறது.
மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் நேற்று, உணவு வினியோகத்துறை செயலாளர்கள் மற்றும் மாநில அரசுகளின் பிற அதிகாரிகள், இந்திய உணவுக் கூட்டுக் கழகம் (எஃப்.சி.ஐ), மத்திய கிட்டங்கிக் கழகம் (சி.டபிள்யூ.சி) மற்றும் மாநில கிட்டங்கிக் கழகங்கள் (எஸ்.டபிள்யூ.சி) அதிகாரிகளுடன் இதுதொடர்பாக ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளார்.
இந்த கூட்டத்தில்தான், இதுபோன்ற முக்கிய முடிவுக்கு இறுதி வடிவம் கொடுக்கப்பட்டுள்ளது.
உங்க பஞ்சாயத்து தலைவர் இருக்காரா.. கூப்பிடுங்க அவரை.. சென்னையிலிருந்து கமல் நடத்திய கிராம சபை!
ராம் விலாஸ் பாஸ்வான்
இதுபற்றி பாஸ்வான் கூறியதாவது: இந்த திட்டத்தின் முன்னேற்பாடுகளை, ஒரு வருடத்தில் முடிக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம். திட்டத்தை செயல்படுத்த அனைத்து பொது வினியோக கடைகளிலும் பாயிண்ட் ஆஃப் சேல் இயந்திரங்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
இயந்திரங்கள்
ஆந்திரா, ஹரியானா போன்ற சில மாநிலங்களில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் இந்த இயந்திரங்கள் ஏற்கனவே உள்ளன. ஆனால் நாடு முழுவதும் இத்திட்டத்தை கொண்டு சேர்க்க, 100 சதவீதம் எல்லா ரேஷன் கடைகளிலும் பாயிண்ட் ஆஃப் சேல் இயந்திரங்கள் தேவை. இந்த திட்டம் பயனாளிகளுக்கு பொருள் வாங்கும் சுதந்திரத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, ஏனெனில் அவர்கள் ஒரு ரேஷன் கடையுடன் மட்டுமே பிணைக்கப்பட மாட்டார்கள், ஊழலைக் குறைக்கும் திட்டம் இதுவாகும். இடம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு இந்த திட்டம் மிக உதவியாக இருக்கும். இவ்வாறு பாஸ்வான் தெரிவித்தார்.
எல்லா மாநிலங்களும்
நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: ரேஷன் கடைகளின் ஒருங்கிணைந்த மேலாண்மை (ஐ.எம்.பி.டி.எஸ்), நடைமுறையின்கீழ் ரேஷன்கார்டுதாரர்கள், எந்த மாவட்டத்திலிருந்தும் உணவு தானியங்களை பெற முடியும் என்ற திட்டம் தற்போது, ஆந்திரா, குஜராத், ஹரியானா, ஜார்க்கண்ட், கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், தெலுங்கானா மற்றும் திரிபுரா மாநிலங்களில், செயல்பட்டு வருகிறது. மற்ற மாநிலங்கள் விரைவாக இதுபோன்ற திட்டத்தை செயல்படுத்தும் என்று உறுதியளித்துள்ளன. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலன்கள்
ஒரே ரேஷன் கார்டு கொண்டு வரப்பட்டால், நாட்டில் எந்த மாநிலத்தில் வசித்தாலும், அந்தந்த பகுதிகளில் உள்ள கடைகளில் ரேஷன் பொருட்களை பெற முடியும். ரேஷன் கார்டுகளை மாற்றம் செய்ய அலையத் தேவையிருக்காது. ரேஷன் கார்டு ரத்தாகும் வாய்ப்பு இதனால் குறையும். ஆதார் மற்றும் ரேஷன் கார்டுகள் இணைக்கப்பட்டுள்ளதால், முறைகேடும் நடக்காது. இது பிற மாநிலங்களுக்கு இடம் பெயருவோருக்கு வரப்பிரசாதமான திட்டமாகும்.